கரோனா தொற்றின் இரண்டாம் அலையை மக்கள் கண்டுகொள்ளாவிட்டால், தொற்று பரவல் கடுமையாகும் என கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதற்கான காரணங்கள், சிகிச்சைகள், தடுப்புமுறைகள் குறித்து கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிக்குமார் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தன. பின்னர், அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், திருவிழாக்களில் கலந்துகொண்ட மக்களிடம் தொற்று குறித்த பயம் இல்லை. ஒரு சிலரே முகக்கவசம் அணிந்தனர். இதனால், நடப்பாண்டு கரோனா பரவல் அதிகமாக உள்ளது. தாங்கமுடியாத உடல்வலி, சிலருக்கு வயிற்றுப்போக்கு, தலைவலி, சுவை, வாசனை தெரியாமல் இருப்பது, காய்ச்சல் ஆகியவை தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள். இவை இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சி.டி.ஸ்கேன் பரிசோதனை
உருமாறிய கரோனா வைரஸால் இங்கு பாதிப்பில்லை. இங்கு ஏற்படும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அனைத்தையும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறியலாம். ஆனால், இரண்டாம் அலையை மக்கள் கண்டுகொள்ளவில்லையெனில், தொற்று பரவல் கடுமையாகும். கடந்த ஆண்டைவிட 4 மடங்கு பாதிப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் 70 முதல் 90 சதவீதம் துல்லியமாக தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். முதலில் மூக்கில் இருக்கும் வைரஸ், தொண்டை, வயிறு பகுதிக்கு செல்கிறது. எனவே, தொற்று ஏற்பட்டு 10 நாட்கள் கழித்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் நெகட்டிவ் (தொற்று இல்லை) என்று வர வாய்ப்பு உள்ளது. ஆனால், சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் தொற்றால் நுரையீரல் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியலாம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூச்சுத்திணறல் இல்லாதவர்கள், உடலில் ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளவர்கள், லேசான சோர்வு மட்டும் உள்ளவர்கள், வேறு தொந்தரவு இல்லாதவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் பாரதியார் பல்கலைக்கழகம், கொடிசியா வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். மிதமானது முதல் தீவிர பாதிப்பு உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் உடல்வலி குறைந்துவிடும். மூன்று, நான்காம் நாட்களில் சுவை, வாசனை தெரிந்துவிடும். செயற்கை ஆக்சிஜன் இல்லாமல், உடலில் ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கும். அனுமதிக்கப்பட்ட 5-வது நாளில் மீண்டும் ஒருமுறை ஆர்.டி.பி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், நெகட்டிவ் என்றால் மட்டும் நோயாளி வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்.
தடுப்பூசியின் முக்கியத்துவும்
பொதுமக்கள் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன் அவர்களுக்கு 10 முதல் 40 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 15 நாட்களில் முழுமையாக எதிர்ப்பு சக்தி உருவாகும். தடுப்பூசிகள் போட்ட பிறகும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்று வர வாய்ப்பு உள்ளது. ஆனால், உயிருக்கு ஆபத்தான வகையில் தீவிர பாதிப்பு ஏற்படாது.
தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி, வாய், மூக்கை முகக்கவசத்தால் மூடி, கையை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தமாக வைத்திருந்தால் தற்போதைய எண்ணிக்கை கால்பங்காக குறைந்துவிடும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago