எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?- வாக்களித்தபின் சீமான் கேள்வி

By செய்திப்பிரிவு

பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகும் சூழல் உள்ளது. அதனால்தான், அந்த முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதனைக் கண்டுபிடித்த நாடுகளே கைவிட்டுவிட்டன. அதற்கு மைக்ரோசிப் கண்டுபிடித்த ஜப்பானே அதனைப் பயன்படுத்தவில்லை. நைஜீரியாவும், இந்தியாவும்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.

நீட் தேர்வு எழுதும்போது மூக்குத்தி, காதணிகளைக் கழற்றுகின்றனர். அதற்குள் 'பிட்'டை மறைத்து வைக்க முடியும் என நம்பச் சொல்கிறது அரசு. ஆனால், இந்த இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்கிறது. நாங்கள் வாக்குச்சீட்டு முறைக்கு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மனிதக் கழிவுகளை மனிதனையே அள்ள வைத்துவிட்டு வாக்குகளை இயந்திரத்தில் பதிவு செய்யச் சொல்கின்றனர். அமெரிக்காவில் இது தலைகீழாக உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கை எடுபடுவதில்லை. ஒருவருக்குச் செலுத்தும் வாக்கு மற்றவருக்குப் போகும் வாய்ப்பும் உள்ளது. இதுவொரு ஜனநாயகக் கூத்து.

பணம் கொடுப்பது தெரிந்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது. பத்தாண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடை எனப் பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பயம் வரும். ஆனால், சாலையில் செல்லும் சாமானியர்களையே தேர்தல் ஆணையம் பிடிக்கிறது.

அதிமுக, திமுக பணம் கொடுத்ததற்கு என்ன நடவடிக்கை எடுத்தது? கதவில் 'PAID' என எழுதிவைத்துச் செல்கின்றனர். தேர்தல் ஆணையம் தெரிந்தே இதனை அனுமதிக்கிறது. பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான்.

வாக்குகளை எண்ணுவதற்கு ஏன் இத்தனை நாட்கள் என்பது குறித்து யார் பேசுகிறார்கள்? நான் ஒருவன்தான் கத்திக்கொண்டு இருக்கிறேன். நாட்டுக்கே 7 கட்டங்களாக நடத்திவிட்டு மேற்கு வங்கத்திற்கு 8 கட்டங்களாக ஏன் தேர்தல் நடத்த வேண்டும்? டிஜிட்டல் இந்தியா எனப் பேசுகிறீர்கள். அமெரிக்காவிலேயே ஒரு நாளில் வாக்குப்பதிவு முடித்து முடிவுகளைச் சொல்லிவிடுகின்றனர். எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?

தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்கு போடுவார்கள்? நாங்கள் அடங்கியிருப்போம். நீங்கள் அடங்கியிருப்பிர்களா? என்னமோ நடக்கிறது? நாங்களும் வேறு வழியில்லாமல் இந்தப் பாதையில் நடந்துகொண்டிருக்கிறோம்".

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்