தபால் வாக்குப்பதிவில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்கு: தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்துவைப்பு

By செய்திப்பிரிவு

தபால் வாக்குப்பதிவின்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தேர்தல் அதிகாரி மதிக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, மிகப்பெரிய பணியான தேர்தல் பணி நடக்கும்போது நடக்கும் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாகக் கூறி, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடி அமைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது எனவும், தபால் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்ற உயர் நீதிமன்றம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மேலும், வாக்களிக்கத் தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யவும், தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவைத் தலைமைத் தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே அவமதித்து விட்டதாகக் கூறி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குப் பதிவு செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளனர். மேலும், தபால் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பித்த 114 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது 0.3 சதவீதம்தான் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தலைமைத் தேர்தல் அதிகாரியின் மனு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகத் தெரியவில்லை எனவும் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மேலும், மிகப்பெரிய பணியான தேர்தல் நடத்தும் பணியில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்