அனுமதி பெறாமல் பல்க் எஸ்எம்எஸ் அனுப்பிய புதுச்சேரி பாஜகவுக்கு எதிரான புகாரில் விசாரணை முடியும் வரை சட்டப்பேரவைத் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்து சிறப்பு புலன் விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பல்க் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு முன்னரே உரிய முன் அனுமதி பெற வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், பாஜக நிர்வாகி ஒருவர் பல்க் எஸ்எம்எஸ் அனுப்புகிறார். அதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு, “மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. வாக்காளர்களுக்கு பல்க் எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் எங்களிடம் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் பல்க் எஸ்எம்எஸ் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு பாஜகவுக்கு மார்ச் 7-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பாஜக தரப்பில் பதில் அளிக்கவில்லை.
மார்ச் 8-ல் விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் சொல்வதுபோல எந்த விண்ணப்பமும் நாங்கள் பெறவில்லை. பல்க் எஸ்எம்எஸ் குறித்து சைபர் கிரைம் விசாரித்து வருகின்றது. அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார். அதே நேரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தலை நியாயமாக நடத்திவரும் நேர்மையான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அது நீங்களாகக் கொடுத்துக்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் சுய சான்றுதானே தவிர நீதிமன்றம் ஏதும் கூறவில்லை எனச் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படிக் கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை, புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? எனத் தேர்தல் ஆணையத்திற்குக் கேள்வி எழுப்பினர்.
பல்க் எஸ்எம்எஸ் அனுமதி கோரி பாஜக விண்ணப்பிக்கவில்லை. விசாரணை நேர்மையாகச் சென்று கொண்டிருக்கிறது, விசாரணை நடைபெறும் நிலையில், தேர்தலைத் தள்ளிவைக்கும் பேச்சு தேவையற்றது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பின்னர் ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
3 hours ago