கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: கோவையில் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

By டி.ஜி.ரகுபதி

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என, பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று (பிப். 25) மதியம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

"பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கோவை மாநகருக்கு வருகை தந்துள்ள பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. கரோனா நோய் தொற்று காலத்திலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்தது. முதலீடுகளை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் முதல் மாநிலம் என்ற நிலையை தமிழகம் பெற்றுள்ளது.

குடிமராமத்து திட்டம், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

ரூ.934 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் மூலம் முழுமையான நீர்ப்பாசன பகுதிகளுக்கும், கடைமடை வரை நீர் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டதை செயல்படுத்துவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 401 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு 2 லட்சத்து 47 ஆயிரத்து 247 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இந்த திட்டத்திற்கான நிதியையும் தமிழகத்தின் இதர நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திடுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நவாமி கங்கை திட்டத்தைப் போன்று காவிரி கிளை நதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48.45 சதவீத மக்கள் நகர பகுதியில் வசிக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் அடிப்படையில் கூட்டு திட்டமாக செயல்படுத்திட கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திடுமாறும், சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களிலிருந்து இரவு நேர விமானங்களை இயக்க ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. கோவையிலிருந்து துபாய்-க்கு நேரடி விமானங்களை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

42 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்