புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் ராஜினாமாவால் ஆளும்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில், கூட்டணிக்கட்சி திமுகவின் எம்.எல்.ஏ வெங்கடேசனும் ராஜினாமா செய்து விட்டார்.
எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா பற்றி பாஜக ஏற்கெனவே தெரிவித்த நிலையில், அடுத்தடுத்த திருப்பதால் காங்கிரஸ் தவிக்கிறது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3, சுயேட்சை எம்எல்ஏ என 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸிலிருந்து தனவேலு எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 9 பேராகி உள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏவான வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தந்துள்ளார். "தொகுதி மேம்பாட்டு நிதியே தராததால் தொகுதிக்கு பணியாற்ற இயலாத சூழலால் ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
நாளை சட்டப்பேரவையில் ஆளும்கட்சி பெரும்பான்மையை நிருபிக்க வாக்கெடுப்பு நடக்க உள்ளசூழலில் காங்கிரஸ் கூட்டணியில் வரிசையாக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்கின்றனர்.
ஏற்கெனவே பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் எம்எல்ஏக்கள் விலகல் பற்றி தெரிவித்திருந்த சூழலில் இந்த ராஜினாமாக்கள் நடக்கிறது. அடுத்தடுத்த திருப்பதால் காங்கிரஸ் தவிப்பில் உள்ளது.
இச்சூழலில் இன்று இரவு காங்கிரஸ்-திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 9, திமுக-2, சுயேட்சை 1 என 12 பேரே உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்7, அதிமுக 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)-3 என 14 பேர் உள்ளனர்.
நியமன எம்எல்ஏக்களுக்கு பேரவையில் அனுமதி புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ள கோணத்தில் அணுக காங்கிரஸ் கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் நடைபெறும் பலப்பரீட்சையில் நியமன எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் விலகலுக்கு பிறகு சட்டப்பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைத்து சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் எதிர்கட்சி வரிசையின் இறுதியில் நியமன பாஜக எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வணபதி, தங்கவிக்ரமனுக்கு அடுத்தடுத்த இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க வருமாறு சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பும் விடுத்துள்ளார். சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து கடிதமும் அனுப்பபட்டுள்ளது. அதோடு சட்டசபை அலுவல் பட்டியலில் ஒரே ஒரு அலுவலாக நம்பிக்கை கோரும் பிரேரனை மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதிலும், விவாதமும் வாக்கெடுப்பும் என இடம் பெறவில்லை. இதனால், சபையில் விவாதமின்றி நேரடியாக வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.
இருப்பினும், சட்டப்பேரவையை பொருத்தவரையில் சபாநாயகரின் முடிவே இறுதியானது ஆகும். புதுவையில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பங்கள், ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பலப்பரீட்சை ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago