டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் பிப்.21-ல் தொடக்கம்: அம்பேத்கர் கல்வி மையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் 21.02.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் தொடங்குவதாக டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட ஓராண்டு போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையில் உத்தேசமாக குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் மே மாதம் வெளிவர இருக்கிறது.

அரசின் அறிவிப்பில் தோராயமான காலிப் பணியிடங்கள் 2000க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து அரசின் அறிவிப்பில் இருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்க டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி வருகிறது. ஏற்கெனவே இங்கு பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதன்மைத் தேர்விற்கும் தயாராகி வருகிறார்கள்.

இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மையம் வெளியிட்ட அறிவிப்பு:

''டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2 தேர்வில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வின் பாடத்திட்டங்களை முழுமையாக ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம். தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் மாதிரித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மாணவர்களின் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பொதுவான பட்டப்படிப்பு என்றாலும், வயது உச்ச வரம்பு மற்றும் இதர விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தைச் சென்று ( www.tnpsc.gov.in ) பார்க்கவும்.

குரூப்-2 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும், மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள் கலந்துரையாடல் வடிவத்தில் இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனை வழங்குவார்கள். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இவ்வகுப்புகளை, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகின்றன. அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கிடைத்த முன் அனுபவங்களைக் கொண்டு சிறப்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று அரசுத்துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் பயிற்சி வகுப்புகள் வரும் 21.02.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை மாதிரித் தேர்வுடன் கூடிய கலந்துரையாடல் வடிவத்தில் நடைபெறும்.

கலந்துரையாடலின் சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் போட்டியில் அதிகபட்ச பலத்தோடு போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான்.

பயிற்சி நடைபெறும் இடம். சிஐடியு அலுவலகம்.

No. 6/9. கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரம், ஆர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை-600 001.

பயிற்சி பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள். அமலா - 63698 74318. வாசுதேவன். - 94446 41712. நிவாஸ்-70920 95474.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் கரோனா பெருந்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்க அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

1. அனுமதிக்கப்பட்ட சமூக இடைவெளி.
2. கால இடைவெளியில் சானிடைசர் பயன்படுத்தல் வேண்டும்.
3. முகக்கவசம் அவசியம். தனிநபர் இடைவெளி போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் அவசியம்.

மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். கரோனா நோய்தொற்றை முன்னிட்டுப் பாதி அளவே இருக்கைகள் இருப்பதால் முன்பதிவு அவசியம்''.

இவ்வாறு அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்