தூத்துக்குடியில் சுதாகரன், இளவரசிக்குச் சொந்தமான 1,200 ஏக்கர் சொத்துகள் அரசுடமை

By ரெ.ஜாய்சன்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலாவின் உறவினர்களான வி.என்.சுதாகரன் மற்றும் ஜெ.இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 ஏக்கர் பரப்பில் உள்ள 23 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன. இந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான வி.என்.சுதாகரன் மற்றும் ஜெ.இளவரசி ஆகியோருக்குச் சொந்தமாகத் தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இருவருக்கும் சொந்தமான 23 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தூத்துக்குடி வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட 23 சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட சேரகுளம் வருவாய் கிராமத்தில் சுமார் 580 ஏக்கர் பரப்பளவிலான 11 சொத்துகள், வல்லகுளம் வருவாய் கிராமத்தில் சுமார் 270 ஏக்கர் பரப்பில் 5 சொத்துகள், கால்வாய் கிராமத்தில் சுமார் 62 ஏக்கர் பரப்பில் 2 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதேபோல் சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பிலான 5 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சொத்துகள் அனைத்தும் ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் (பி) லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்தச் சொத்துகள் அனைத்தும் வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் 17.11.1994, 22.11.1994, 06.01.1995, 21.02.1995 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்தச் சொத்துகளைப் பறிமுதல் செய்து, தமிழ்நாடு அரசின் சொத்து எனப் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கையில் உள்ளது. இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில், இந்தச் சொத்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்தச் சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உட்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்குப் பாத்தியப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுடமையாக்கப்பட்டுள்ள சொத்துகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் கோபாலகிருஷ்ணன், சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 mins ago

தமிழகம்

35 mins ago

க்ரைம்

43 mins ago

தமிழகம்

40 mins ago

கல்வி

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

மேலும்