பத்து மாதங்களுக்குப் பிறகு பஞ்சலிங்க அருவியில் குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. அடிவாரப் பகுதியில் இருந்து 900 மீட்டர் தொலைவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அந்த பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் வருவதாக வனத்துறை கூறிவருகிறது.
இருந்தபோதும் கடந்த 2010 முதல் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக அருவிக்கு செல்வோரிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 மார்ச் முதல் கரோனா ஊரடங்கு காரணமாக அருவிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் அருவிக்கு செல்ல கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் கரோனா பரவல் காரணத்தை கூறி வனத்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு நேற்று வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுச் சீட்டு வழங்கி அருவிக்கு செல்ல அனுமதித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் சிலரும் வனத்துறையின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் இரு துறையினர் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சுகுமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, “2008-ல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 18 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்கு பின் அப்போதைய ஆட்சியர், அருவி பகுதியில் போதிய கண்காணிப்பை பலப்படுத்த தேவையான ஊழியர்களை நியமிக்கவும், அதற்காக சிறிய தொகையை நுழைவுக் கட்டணமாக வசூலிக்கவும் உத்தரவிட்டார். 2010-ம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகமே இதனை நிர்வகித்து வருகிறது. அருவி அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதற்கான ஆவணங்கள் உள்ளன. அருவிஅமைந்துள்ள பகுதியில் சுற்றுலாப்பயணிகளுக்கான எந்த அடிப்படைவசதிகளையும் மேற்கொள்ள வனத்துறை இதுவரை அனுமதிக் கவில்லை. இதுதொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்’’ என்றார்.
உடுமலை வனச்சரக அலுவலர் தனபால் கூறும்போது, “திருமூர்த்தி மலை முழுவதுமே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் தான் உள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியில் வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி உள்ளது. நிரந்தர கட்டுமானம் கட்ட அனுமதியில்லை. மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தற்காலிக கட்டுமானம் ஏற்படுத்திக்கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. அருவி அமைந்துள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது.அதற்கான நுழைவுக் கட்டணத்தை வனத்துறை வசூலிப்பதே முறையாகும். இதுகுறித்து துறை ரீதியாக உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago