காலில் அறுவை சிகிச்சை; சில நாட்கள் ஓய்வு- புதிய விசையுடன் வருவேன்: கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் புதிய விசையுடன் அரசியல் சுற்றுப்பயணத்துக்கு வருவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விறுவிறுப்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தார். இந்நிலையில், காலில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் அதன் நிமித்தமாக சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் புதிய விசையுடன் மீண்டு வருவேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தை தலை நிமிரச்‌ செய்ய 'சீரமைப்போம்‌ தமிழகத்தை' எனும்‌ முதல்‌ கட்ட தேர்தல்‌ பிரச்சாரத்தைப்‌ பூர்த்தி செய்திருக்கிறேன்‌. ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம்‌ கிலோமீட்டர் பயணித்து தமிழ்‌ மக்களைச்‌ சந்தித்திருக்கிறேன்‌. மாற்றத்திற்கான மக்கள்‌ எழுச்சியை கண்ணாரக்‌ கண்டு திரும்பியிருக்கிறேன்‌.

அது போலவே, கரோனா பொது முடக்கத்தின்‌ போது துவங்கிய “பிக்பாஸ்‌ - சீசன்‌ 4” தொலைக்காட்சி நிகழ்ச்சியையும்‌ வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்‌. இதுவும்‌ மக்களுடனான பயணம்தான்‌. நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம்‌ உரையாடியதும்‌, உறவாடியதும்‌ மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஏற்பட்ட விபத்தில்‌ காலில்‌ ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன்‌. அதன்‌ தொடர்ச்சியாக, இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள்‌ அறிவுறுத்தி இருந்தார்கள்‌. அதை மீறித்தான்‌ சினிமா வேலைகளும்‌, அரசியல்‌ சேவைகளும்‌ தொடர்ந்தன.

பிரச்சாரத்தைத்‌ துவங்கும்போதே காலில்‌ நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின்‌ அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது.

ஆகவே, காலில்‌ ஒரு சிறு அறுவைச்‌ சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்‌. சில நாட்கள்‌ ஓய்வுக்குப்‌ பின்‌ மீண்டும்‌ என்‌ பணிகளைப்‌ புதிய விசையுடன்‌ தொடர்வேன்‌.

மக்களை நேரில்‌ சந்திக்க இயலாது எனும்‌ மனக்குறையை தொழில்நுட்பத்தின்‌ வாயிலாகப்‌ போக்கிக்கொள்ளலாம்‌. இந்த 'மருத்துவ விடுப்பில்‌' உங்களோடு இணையம்‌ வழியாகவும்‌, வீடியோக்கள்‌ வழியாகவும்‌ பேசுவேன்‌. மாற்றத்திற்கான நம்‌ உரையாடல்‌ இடையூறின்றி நிகழும்‌.

என்‌ மண்ணுக்கும்‌, மொழிக்கும்‌, மக்களுக்கும்‌ சிறு துன்பம்‌ என்றாலும்‌ என்‌ குரல்‌ எங்கும்‌ எப்போதும்‌ எதிரொலித்தபடிதான்‌ இருக்கும்‌. இப்போதும்‌ அது தொடரும்‌.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

13 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்