பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவே அரசு பல சலுகைகளை வழங்கியது: அமைச்சர் கே.சி.வீரமணி

By ந. சரவணன்

பொங்கல் பண்டிகையைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவே அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் ‘பொங்கல் திருவிழா’ இன்று (ஜன.12) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒட்டி சுற்றுலாத் துறை சார்பில் தமிழர்களின் பாரம்பரியக் கலாச்சார நிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாட்டு வண்டியில் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் ஆகியோர் மேளதாளம் முழங்க ஊர்வலம் வந்தனர். பிறகு, மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி குத்து விளக்கேற்றினார்.

கலாச்சார நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து அமைச்சர் வீரமணி பேசியதாவது:

''உழவர் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறும் திருநாளாகப் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றால் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாட முடியுமா என்ற அச்சம் நம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், கரோனா தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. மேலும், கரோனாவால் வேலை இழந்து ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.2,500 பணமும் வழங்கப்பட்டது.

கலாச்சாரக் குழுவினரின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள்

இத்திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும், நம் கலாச்சார நிகழ்வுகளும் இங்கு நடத்தப்பட்டன. இதைப் பார்க்கும் எதிர்காலச் சந்ததியினர் உழவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாட வேண்டும். பல்வேறு பணிகள் எனக்கு இருந்தாலும், புதிய மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் பொங்கல் விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

கரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வளவோ சிரமங்களை மக்கள் அனுபவித்து விட்டனர். தற்போது தை பிறந்துள்ளது. இனி எல்லாம் செழிப்பாகவே இருக்கும். தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் விருப்பம்''.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்