அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களின் படங்கள், அதிமுக கட்சியின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்தப் பொங்கல் பரிசுத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக, அதிமுகவினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த டோக்கன்கள் ஆளும் கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்துப் பயனாளிகளுக்கும் இந்தப் பரிசுத் தொகை போய்ச் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையீடு செய்தார்.
அதன்படி, இந்த வழக்கை இன்று (டிச.30) நீதிபதிகள் விசாரித்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் அரசின் அதிகாரபூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப் பொருள் மற்றும் பரிசுத் தொகை வழங்க வேண்டுமென ரேஷன் கடைகளுக்குச் சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.
அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களைத் தவிர வேறு எந்த டோக்கனும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
அரசின் சுற்றிறிக்கையை நாளை (டிச.31) மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
ஓடிடி களம்
47 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago