கிராம சபைக் கூட்டம்; சட்ட விரோதமான, தவறான உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

By செய்திப்பிரிவு

கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (டிச.26) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்மை எதிர்க்கட்சியான திமுக, கிராம சபைக் கூட்டங்களை நடத்தி 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்கிற மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராம ஊராட்சிகளில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களும் திரண்டுவந்து 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற ஒருவரித் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவித்து, நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த கிராம சபைக் கூட்டங்கள் அரசியல் கட்சியின் முடிவின்படி நடைபெறுகிற ஜனநாயக வழிமுறையிலான இயக்கம் என்பதைக் கூட அறிந்துகொள்ள முடியாத ஆத்திரத்துக்கு தமிழ்நாடு அரசு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக, அரசின் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அவசர அவரசமாக, அறிவுக்குப் பொருத்தமில்லாத ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி ஊராட்சித் தலைவர்கள், சட்டத்தில் கூறியுள்ளபடி 4 முறை மட்டும்தான் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடியுமா? கூடுதலான கூட்டங்களை நடத்த உரிமையற்றவரா? ஊராட்சித் தலைவர் அவசியம் எனக் கருதும்போது கிராம சபைக் கூட்டத்தை கூட்டுவதைத் தடுக்க அரசுக்கு உரிமையுண்டா? அது பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு விரோதம் அல்லவா?

கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர் உட்பட அனைவரும் அவரவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் சார்பை 'பாம்பு சட்டை உரிப்பது போல்' கழட்டி விடுவது நடைமுறை சாத்தியமா? இதுபோன்ற கேள்விகள் எழும் என்பதைக் கூட சிந்தக்கவில்லை. பயம், வரும் தேர்தலில் படுதோல்வி அடைவோம் என்பதால் ஏற்பட்ட தோல்வி பயம். அந்த பயத்தில் ஜன்னி கண்ட உதறலில் போடப்பட்ட அரசாணை என்பதைக் காலம் எடுத்துரைக்கும்.

திமுகவின் ஜனநாயக நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு அரசு அதிகாரபூர்வமாக அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்தான் ஊரக வளர்ச்சித் துறையின் உத்தரவாகும்.

பகலவனின் வெளிச்சத்தைக் கை நீட்டி மறைக்கும் முயற்சியில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயலை அறிந்த மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அனைத்துப் பிரிவு மக்களும் பேராதரவு தருவதைக் கருத்தில் கொண்டு, ஊரக வளர்ச்சித்துறையின் சட்டவிரோத தவறான உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

37 mins ago

க்ரைம்

43 mins ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்