புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவரை நீந்திச்சென்று மீட்டு உயிரை காப்பாற்றிய இளைஞரை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் பாலாஜி. வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு நேற்று (டிச. 24) பிறந்தநாள். இதையொட்டி, பாலாஜி தன்னுடன் படிக்கும் பள்ளி நண்பர்களான முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த எழிலரசு மகன் புவியரசன் (17) உள்பட 7 பேருடன் தவளக்குப்பத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் பேரடைஸ் கடற்கரைக்கு சென்றார்.
அங்கு பாலாஜி தனது நண்பர்களுடன் 'கேக்' வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். பின்னர், அவர்கள் அனைவரும் ஆறும்-கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியில் இறங்கி குளித்தனர். அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையில் பாலாஜி, புவியரசன் இருவரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதில், புவியரசன் மாயமானார். பாலாஜி நீரில் மூழ்கி சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனிடையே, பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த அய்யனார் (27), தனது நண்பர்கள் பிரவீன் (36), ஹரிகிருஷ்ணன் (29) மற்றும் அவர்களின் குடும்பத்துடன் கடற்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாணவர்களின் சத்தம் கேட்டு அங்கு சென்ற அய்யனார், துளியும் யோசிக்காமல் நீரில் இறங்கி நீந்திச்சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாலாஜியை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தார். உடனே அங்கிருந்த அவரது நண்பர்கள் மாணவருக்கு முதலுதவி அளித்தனர். இதைத்தொடர்ந்து, மாணவரை புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாயமான புவியரசனை தேடும் பணியில் தவளக்குப்பம் காவல் துறையினர், உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடலில் மூழ்கி முகத்துவாரம் பகுதியில் சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவரை அய்யனார் கடலில் இறங்கி மீட்டு வருவதும், அவரது நண்பர்கள் மாணவருக்கு முதலுதவி அளிப்பதுமான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அறிந்த தெற்கு பகுதி போலீஸ் எஸ்.பி. லோகேஸ்வரன், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் ஆகியோர் அய்யனாரை பாராட்டினர். மேலும், இளைஞர்களின் இச்செயலை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
28 mins ago
விளையாட்டு
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago