மதுரை யானைமலையில் உள்ள சிமெண்ட் சிவலிங்கத்தை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை யானைமலையில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிவலிங்கத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏற்கெனவே 50 நினைவுச் சின்னங்கள் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 நினைவுச் சின்னங்கள் பராமரிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு 5.11.2020-ல் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு டிச. 17-க்குள் அனுமதி வழங்க வேண்டும்.

தொல்லியல் இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் நாட்டின் பொக்கிஷங்கள். இவைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். பராமரிப்பாளர்கள் தினமும் 12 மணி நேரமாவது தொல்லியல் இடங்களில் இருக்க வேண்டும். அவர்கள் பராமரிப்பாளர்களாக மட்டும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு தொல்லியல் இடங்களின் சிறப்புகளை எடுத்துரைப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இதை உயர்த்துவது, பணிகளை வரையறை செய்வது தொடர்பாக தமிழக அரசு டிச. 17-க்குள் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் குறித்து பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அடுத்த விசாரணைக்குள் பெயர் பலகை அமைக்க வேண்டும்.

மதுரை யானைமலையில் ஜெயின் படுகைக்கு செல்லும் வழியில் சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. யானைமலை போன்ற நினைவுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். அந்த பழங்கால நினைவுச் சின்னத்தின் அடையாளத்தை மாற்றும் வகையில் அங்கு எவ்வித மத அடையாளங்களையும் நிறுவக்கூடாது.

அவ்வாறு செய்வது பழங்கால நினைவுச் சின்னங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும். இதனால் யானைமலையில் உள்ள சிமெண்ட் சிவலிங்கத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும். தவறினால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் மாணவர்கள் ஆர்வமாக சேர்கின்றனர். இருப்பினும் தொல்லியல் படிப்புகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை.

எனவே இரு பல்கலைக்கழகங்களிலும் தொல்லியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளார்களா? எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன? என்பது தொடர்பாக இரு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி, ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மாதிரியை தாக்கல் செய்துள்ளார். அவற்றை அமெரிக்கா புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு வயதை கண்டறியும் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்பி, அடுத்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல்துறை அனுமதி கேட்டு மத்திய தொல்லியல்துறைக்கு விண்ணப்பித்துள்ளது.

இந்த விண்ணப்பத்தின் மீதான முடிவு மற்றும் சென்னை கல்வெட்டு இயக்குனரகத்தின் தென் மண்டல அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும். அடுத்த விசாரணை டிச. 18-ல் நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்