எதிர்க்கட்சி எம்எல்ஏ என்பதால் தன்னை மழைநீரை வெளியேற்றும் பணியை செய்யவிடாமல் ஆளும்கட்சியினர் இடையூறு செய்வதாக தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அறிந்தும், அறியாதது போல இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் நான் என்ன வேலை சொன்னாலும் மாநகராட்சி அதிகாரிகள் செய்வதில்லை.
குறிப்பாக மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்ப், டேங்கர் லாரி போன்றவற்றை நான் கேட்டால் அனுப்புவதில்லை.
இருப்பினும் நாங்கள் எங்களது சொந்த செலவில் 15 இடங்களில் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். இன்னும் 10 மோட்டார் பம்புகள் ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு நாங்களே சொந்தமாக மோட்டார் பம்புகளை அமைத்து தண்ணீரை வெளியேற்றினாலும் ஆளும்கட்சியினர் இடையூறு செய்கிறார்கள். நாங்கள் இரவு, பகலாக பணியாற்றி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆனால், எங்களை பணி செய்யவிடாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அசரமாட்டோம். தொடர்ந்து மக்கள் பணிகளை செய்வோம்.
தூத்துக்குடியில் செயின்ட் மேரீஸ் காலனி, லூர்தம்மாள்புரம், பாத்திமாநகர், வெற்றிவேல்புரம், பிரையண்ட் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பம்ப் ஹவுஸ்களில் 6 எச்பி திறன் கொண்ட மோட்டார்கள் தான் உள்ளன.
அவைகளும் முறையான பராமரிப்பு இல்லாததால் சரியாக ஓடுவதில்லை. இந்த மோட்டார்களை 20 எச்பி திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என நான் பலமுறை கூறியும் மாநகராட்சி அதிகாரிகள் கேட்கவில்லை. அவ்வாறு அதிக திறன் கொண்ட மோட்டார்கள் இருந்திருந்தால் தற்போது மழைநீரை விரைவாக வெளியேற்றியிருக்க முடியும்.
இதேபோல் மழைநீர் வடிகால்கள் திட்டமிட்டு முறையாக கட்டப்படுவதில்லை. இதனால் வடிகால்களில் தண்ணீர் வெளியேறாமல் தொட்டி போல தேங்கி நிற்கிறது. மாநகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 நாட்கள் ஆகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.
ஆனால், அமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பிரதான சாலையில் மட்டும் பார்த்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
பிரதான சாலை பகுதிகளில் மட்டுமே மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்புற பகுதிகள், குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
பல இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்ற வைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் முறையாக ஓடவில்லை. பல பகுதிகளில் இன்னும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளையே மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவில்லை. இதற்கு மாநகராட்சி மற்றும் அரசின் நிர்வாக சீர்கேடு தான் காரணம்.
இதேபோல் மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகள் சரியாக எரியவில்லை. ஓரிரு நாட்கள் மட்டுமே சரியாக எரிகின்றன. அதன்பிறகு எரிவதில்லை. இதனால் மாநகராட்சியின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
அனைத்து பணிகளுமே உள்ளாட்சித் துறை அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது. இதனால் எந்த பணிகளும் சரியாக நடப்பதில்ல. இதனை அரசு கவனிக்க வேண்டும் என்றார் அவர்.
திமுக மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago