ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் இரண்டு அணைகள், 114 ஏரிகள் முழுமையாக நிரம்பின

By ந. சரவணன்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், 2 அணைகளும், 114 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியில் அதிகபட்சமாக 10 மி.மீ. மழையளவும், ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் அதிகபட்சமாக 26.4 மி.மீ. மழையளவும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வடபுதுப்பட்டு பகுதியில் 13.6 மி.மீ. மழையளவு நேற்று (டிச. 05) பதிவானது.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், நேற்றும், இன்றும் பரவலாக மழை பெய்தது. வேலூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்று (டிச. 06) அதிகாலை காட்பாடி, வேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை நீடித்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலவை, ஆற்காடு, சோளிங்கர், வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் இன்று காலை சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 அணைகளில் குடியாத்தம் மோர்தானா அணையும், திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மோர்தானா அணையின் நீர்வரத்து 708 கன அடியாக உள்ளது. அதே அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. ஆண்டியப்பனூர் அணையின் நீர்வரத்து 43.83 கன அடியாக உள்ளது. அதே அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. கே.வி.குப்பம் அடுத்த ராஜாதோப்பு அணையில் 80 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது 3.76 கன அடியாக உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 519 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளில் இன்று காலை நிலவரப்படி 28 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 91 முதல் 99 சதவீதம் வரை 2 ஏரிகள், 71 முதல் 80 சதவீதம் வரை 1 ஏரியும், 51 முதல் 70 சதவீதம் வரை 6 ஏரிகள், 26 முதல் 50 சதவீதம் வரை 16 ஏரிகளும், 1 முதல் 25 சதவீதம் வரை 40 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. 8 ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 82 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 91 முதல் 99 சதவீதம் வரை 4 ஏரிகள், 71 முதல் 80 சதவீதம் வரை 42 ஏரிகள், 51 முதல் 70 சதவீதம் வரை 69 ஏரிகள், 26 முதல் 50 சதவீதம் வரை 16 ஏரிகள், 1 முதல் 25 சதவீதம் வரை 144 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. 12 ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 4 ஏரிகள் முழுயாக நிரம்பியுள்ளன. 51 முதல் 70 சதவீதம் வரை 3 ஏரிகளிலும், 26 முதல் 50 சதவீதம் வரை 8 ஏரிகளிலும், 1 முதல் 25 சதவீதம் வரை 9 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. 25 ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை. அதேபோல, 3 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கால்வாய்கள் மூலமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. குடியாத்தம் எர்த்தாங்கல் ஏரியில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று வேடிக்கை பார்த்தனர்.

எர்த்தாங்கல் ஏரி முழுமையாக நிரம்பியுள்ள காட்சி.

அதேபோல், குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஏரியில் இருந்து வெளியேறி உபரி நீர், செட்டிக்குப்பம் ஏரிக்கு இன்று திருப்பிவிடப்பட்டது.

வேலூர் மாநகரையொட்டியுள்ள சதுப்பேரி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 25 சதவீதமும், தொரப்பாடி ஏரியில் 40 சதவீதமும் தண்ணீர் நிரம்பியுள்ளன. அதேபோல, மற்ற ஏரிகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8:30 மணி நிலவரப்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: (மில்லி மீட்டரில்)

வேலூர் 10.2., குடியாத்தம் 6.4., காட்பாடி 5.2., மேலாத்தூர் 7.4., பொன்னை 4.4., ராஜாதோப்பு அணைப்பகுதி 3.0., அரக்கோணம் 9.4., ஆற்காடு 12.0., காவேரிப்பாக்கம் 5.0., சோளிங்கர் 10.0., வாலாஜா 14.8., அம்மூர் 26.4., கலவை 16.4., ஆலங்காயம் 4.8., ஆம்பூர் 9.0., வடபுதுப்பட்டு 13.6., கேத்தாண்டப்பட்டி 3.0., திருப்பத்தூர் 1.0., வாணியம்பாடி 5.3 மி.மீட்டர் அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

19 mins ago

உலகம்

21 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்