புரெவி புயல் எதிரொலி: ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் 

By எஸ்.முஹம்மது ராஃபி

புரெவி புயல் இலங்கையைக் கடக்கத் தொடங்கியதும் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய பெய்த பெய்த மழையினால் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த நவம்பர் 25 அன்று புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை வங்கக்கடலில் உருவான புதியக் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் வைக்கப்பட்டது. வங்காள விரிகுடாவில் உருவாகும் பெரும்பாலானப் புயல்கள் இலங்கைக்கு அருகே மையம் கொண்டு தமிழகத்தை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல் 20 ஆண்டுகள் கழித்து இலங்கைக்குள் ஊடுருவி தமிழகம் நோக்கி நகர்ந்தது.

இந்தப் புயல் இலங்கையைக் கடந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தமிழக கடலோரப் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியை அடைந்தது.

முன்னதாக ‘புரெவி’ புயல் புதன்கிழமை இரவு இலங்கையைக் கடந்து தமிழகக் கடற்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் ராமேசுவரம் அதன் சுற்றுப் பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதி சீற்றமாகவும் காணப்பட்டது.

இதனால் ராமேசுவரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகளாக ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, அம்பேத்கர் நகர், இந்திரா நகர், தங்கச்சிமடம் விக்டோரியா நகர், சின்னப்பாலம் ஆகிய இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ராமேசுவரம் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புயல் அறிவிப்பினால் ராமேசுவரத்துக்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததுடன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ராமேசுவரம் ரயில் நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் தனுஷ்கோடியிலிருந்து மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டதால் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி, அரிச்சல்முனை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த 29.11.2020 அன்று பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களை கொண்ட ஒரு படகு இன்ஜின் பழுது காரணமாக கரை திரும்ப இயலாமல் மணலி தீவு அருகே படகை நங்கூரமிட்டிருந்தனர்.

இந்த மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு மண்டபம் கடற்கரைக்கு வியாழக்கிழமை மாலை

கொண்டு வந்தனர். இன்று மாலை நிலவரப்படி ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டிருந்த புயல் பாதுகாப்பு மையங்களில் 500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்:
அதிகப்பட்சமாக ராமேசுவரம் 120 மி.மீ, முதுகுளத்தூர் 105 மி.மீ, தங்கச்சிமடம் 85 மி,மீ, பாம்பன் 62மி.மீ, மண்டபம் 58 மி.மீ, தீர்த்தாண்டதானம் 35 மி.மீ, திருவாடனை 34 மி.மீ, ராமநாதபுரம் 33 மி.மு அளவும் மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்