தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா?- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப்பாடமாக தமிழ் மறுக்கப்படும் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

By கி.மகாராஜன்

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக கற்பிக்கப்படுவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த பொன்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படாது, 6-ம் வகுப்பிருந்து ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மேல் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும். தமிழ் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், இலவச கல்வி உரிமை சட்டம், தமிழக அரசின் தமிழ் கற்றல் விதி ஆகியவற்றிற்கு எதிரானது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 50 சதவீதத்தும் அதிகமானோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்.

எனவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கற்றல் விதிகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும் என திருத்தம் செய்யவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், தமிழ்நாடு கல்வி சட்டத்தில் ஒன்று முதல் 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என்றுள்ளது என்றார்.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி வாதிடுகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. இங்கு படிக்கும் மாணவர்கள் 50 சதவீதம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். விருப்பப்படாமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என்றார்.

இதையேற்க மறுத்து, பிரஞ்சு, ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால், தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள், பிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார். ஆனால், இந்தி, ஆங்கிலம் மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது.

இதை அனுமதித்தால் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்படும். தாய் மொழி கல்வியில் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர். ஒவ்வொரு மொழியையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் மொழியை கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.

பின்னர், விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்