நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆம்பூரில் 107 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, பப்பாளி உள்ளிட்ட பயிர் வகைகள் சேதமடைந்தன. 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மீட்புப் பணிகளில் 4,410 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, நிவர் புயல் நேற்றிரவு (நவ.25) கரையைக் கடந்தது. இதனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் நள்ளிரவில் கனமழை பெய்யத் தொடங்கியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய கனமழை இன்றும் (நவ. 26) தொடர்ந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர், சாலையோரங்களில் வசிப்போர், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் என 750 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசு அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (35) என்பவரது வீடு இன்று காலை இடிந்து விழுந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு சென்று சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் 8 பேரை மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.
அதேபோல, திருப்பத்தூர் அடுத்த குனிச்சி செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி (52) என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 4,300 பப்பாளி மரங்களில் சுமார் 2,000 மரங்கள் கனமழையால் முறிந்து விழுந்தன. வாணியம்பாடி தாலுக்கா, உதயேந்திரம் பேரூராட்சி, மாதாகோயில் தெருவைச் சேர்ந்த வினோத் (30) என்பவரது வீடும் இடிந்து விழுந்தது.
திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கவுதம்பேட்டை மற்றும் மாதனூர் பகுதியில் 3 மின்கம்பங்கள் சாய்ந்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டது. கனமழையால் ஏலகிரி மலைக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், தொடர்மழையால் ஏலகிரி மலையில் 5 பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத் துறையினர் அங்கு சென்று பாறைகளை அகற்றினர். மழையின் தாக்கம் குறையும் வரை ஏலகிரி மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி ஏரி, மடவாளம் பகுதியில் உள்ள பெரிய ஏரி, புலிக்குட்டை ஏரி, ராவுதம்பட்டியில் உள்ள வால் ஏரி ஆகியவை இன்று நிரம்பின.
மற்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாகவும், ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் 90 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், இன்று மதியம் 2 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.16 மில்லியன் கன அடியாக உள்ளதாகவும், தொடர்ந்து 2 நாட்களுக்கு தொடர் மழை பெய்தால் அணை முழுமையாக நிரம்பும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் மழைநீர் இன்று ஆர்ப்பரித்துக் கொட்டியது.
நிவர் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மாவட்டம் முழுவதும் 4,410 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், ஆம்பூர், வாணியம்பாடி, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். நிவாரண முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை சாலையில் உள்ள மேம்பாலம் அடியில் மழைநீர் சூழ்ந்ததால் சி.கே.ஆசிரமம், சிவசக்தி நகர், அவ்வை நகர், மருத்துவர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று ராட்சத மின்மோட்டார்களை கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல், ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதக்கா ரயில்வே மேம்பாலத்தின் அடியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். உடனே, சார் ஆட்சியர் வந்தனாகர்க் மீட்புக் குழுவினருடன் அங்கு சென்று அங்கு தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஆம்பூரையொட்டியுள்ள வனப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. ஆணைமடகு தடுப்பணையில் மழைநீர் நிரம்பி வழிந்தோடியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மதியம் நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:
ஆம்பூர் 107 மி.மீ., ஆம்பூர் வடபுதுப்பட்டு 69.6 மி.மீ., ஆலங்காயம் 85.8 மி.மீ., நாட்றாம்பள்ளி 25 மி.மீ., திருப்பத்தூர் 24.6 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 24 மி.மீ., வாணியம்பாடி 44 மி.மீ., என மொத்தம் 380 மி.மீ, மழையளவு பதிவாகியிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago