உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; அரசு வேலை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரையில் ஜவுளிக்கடை தீ விபத்தில் தீயணைக்கும் முயற்சியில் உயிரிழந்த வீரர்கள் இருவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்ட கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் சிக்கிப் படுகாயம் அடைந்தனர். இதில் சிவராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட முதல்வர் பழனிசாமி, தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட இரங்கல், நிவாரண அறிவிப்பு:

“மதுரை மாநகர், மதுரை தெற்கு வட்டம், தல்லாகுளம், நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (14.11.2020) காலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன் மற்றும் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன்.

கடமை ஆற்றும்போது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன் மற்றும் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் ஆர்.கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகிய இருவரும் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடமையாற்றும்போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்குத் தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும்; அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்து வழங்கவும், அவர்களுக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்