திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு: உரிய முறையில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்குத் தள்ளுபடி 

By செய்திப்பிரிவு

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. பின்னர், உரிய சட்டப்பிரிவுகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொலிக் கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார்.

திருமாவளவனின் அப்பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பெண்களைத் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக, இந்து அமைப்புகள் கண்டித்துப் போராட்டம் நடத்தின. காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருமாவளவன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், தான் பெண்களை இழிவுபடுத்திப் பேசவில்லை. மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பதையே மேற்கோள் காட்டியதைத் திரித்துப் பேசுகிறார்கள் எனத் திருமாவளவன் தெரிவித்தார். மனுஸ்மிருதியைத் தடைசெய்யக் கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க, நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது. இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்கக் கூடாது.

திருமாவளவனின் சர்ச்சைப் பேச்சு காரணமாக தமிழகத்தில் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறார். இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக்கொண்ட, பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றச் செயலாளருக்கு அக்டோபர் 27இல் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு, பொது அமைதிக்குத் திருமாவளவன் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தைப் பயன்படுத்த கூடாது. மனுஸ்மிருதி சட்டப் புத்தகமும் இல்லை. மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா என்பதும் தெரியாது” என்று தெரிவித்தனர்.

எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், உரிய அரசியல் சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

க்ரைம்

8 mins ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்