பரிசோதிக்காமல் செலுத்திய ரத்தத்தால் எச்ஐவி பாதிப்பு; சாத்தூர் பெண் பணிக்குச் செல்ல பைக் வழங்க வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

அரசு மருத்துவமனையில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரத்தத்தால் எச்ஐவி பாதிப்புக்கு ஆளான பெண்ணுக்கு அரசுப் பணிக்குச் செல்ல பைக் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அப்பாஸ் மந்திரி, முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக தாக்கல் செய்த மனு:

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ல் தவறுதலாக எச்ஐவி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தானமாக பெற்ற ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் பெண்ணுக்கு செலுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரத்த சேகரிப்பு மையங்களில் போதுமான பணியாளர்கள் கிடையாது. எனவே, பாதுகாப்பான முறையில் ரத்தம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்த சேகரிப்பு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு வந்தபோது, தவறுதலாக எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். அதில் ரூ.10 லட்சத்தை அப்பெண்ணின் பெயரிலும், மீதமுள்ள ரூ.15 லட்சத்தை அப்பெண்ணின் 2 பெண் குழந்தைகள் பெயரிலும் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறையுடன் சுற்றுச்சுவருடன் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பாதிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் காணொலி காட்சியில் ஆஜரானார்.

அப்போது அவர் நீதிபதிகளிடம் கூறுகையில், நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னிடம் பேசினாலோ, என்னைத் தாண்டி சென்றாலோ எச்.ஐ.வி. பரவிவிடுமோ என பயப்படுகின்றனர். வேண்டா வெறுப்பாக என்னைப் பார்க்கின்றனர்.

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க என்னை அனுமதிப்பதில்லை. எனவே என் வீட்டிற்குள் தனியாக குடிநீர் குழாய் இணைப்பை வழங்க வேண்டும் என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

இதையடுத்து, அப்பெண்ணின் கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எச்ஐவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண், காணொலி காட்சியில் ஆஜராகி, தான் தினமும் பேருந்தில் வேலைக்கு செல்வதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்ணுக்கு வேலைக்குச் செல்ல இரு சக்கர வாகனம் வழங்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்