ரூ.22 கோடி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் பெரியாறு ஷீல்டு கால்வாயைப் புனரமைக்காததால் விவசாயிகள் அதிருப்தி 

By இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே பெரியாறு ஷீல்டு கால்வாயை புனரமைக்க ரூ.22 கோடி ஒதுக்கியும், 2 ஆண்டுகளாக பணி தொடங்காததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

பெரியாறு பாசனநீர் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6,748 ஏக்கர் பயன்பெறுகிறது. இதற்காக 5 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஷீல்டு கால்வாய் மூலம் 40 கண்மாய்களுக்கு தண்ணீர் வருகிறது.

இதன்மூலம் கள்ளராதினிப்பட்டி, திருமலை, மேலப்பூங்குடி, சாலூர், திருமன்பட்டி, சோழபுரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,748.25 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

ஷீல்டு கால்வாய் மதுரை மாவட்டம் மேலூர் குறிச்சிப்பட்டி கண்மாயில் துவங்கி சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை 7 கி.மீ., செல்கிறது. இந்த கால்வாய் 1925-ம் ஆண்டு ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. இன்று வரை மண் கால்வாயாகவே உள்ளது. அதையும் முறையாக சீரமைக்காததால் முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது.

தண்ணீர் திறந்துவிட்டாலும் கண்மாய்களுக்கு செல்வதில்லை. இதனால் 7 ஆண்டுகளுக்காக அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், ஷீல்டு மண் கால்வாயை, கல் கால்வாயாக மாற்ற வேண்டுமென, 2016 டிச., 08-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஷீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைக்கப்படும் என, 110 விதியின் கீழ் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

இதற்கிடையில் குடிமராமத்து திட்டத்தில் குறிச்சிப்பட்டி கண்மாயில் இருந்து முத்தம்பட்டி வரை ஒரு கி.மீ.,க்கு ரூ.1.47 கோடியில் ஷீல்டு கால்வாய் சீரமைக்கப்பட்டது. முத்தம்பட்டியில் இருந்து சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து பெரியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: மேலூர் பகுதிக்கு முதல்போகத்திற்கு பெரியாறு பாசனநீர் திறக்கும்போதே, ஷீல்டு கால்வாய்க்கும் திறக்க வேண்டும்.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தண்ணீர் திறப்பதில்லை. இதையடுத்து நாங்கள் தொடர்ந்து போராடி தண்ணீர் பெறுகிறோம்.

மேலும் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் தண்ணீர் திறந்தாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் 7 ஆண்டுகளாக 1,700 ஏக்கரும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கால்வாயை சீரமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாக பணியை தொடங்கவில்லை, என்று கூறினார்.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷீல்டு கால்வாய் மண் கால்வாயாக இருப்பதால் அகலம் அதிகமாக உள்ளது. அதை 3 மீ., அகலத்திற்கு கல் கால்வாய் கட்டப்பட உள்ளது. டெண்டர் வைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணி தொடங்கப்படும்,’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்