நாடு முழுவதும் தேசப்பிதா மகாத்மா காந்தி பயணம் செய்து 74 ஆண்டுகள் கடந்த பிறகும் திண்டுக்கல், பழநி, காந்தி கிராமம் என காந்தியடிகள் தன் காலடிச் சுவடுகளைப் பதித்துவிட்டுச் சென்ற இடங்கள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன.
சுதந்திர வேட்கையை மக்களிடம் ஏற்படுத்த நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் மகாத்மா. இதன் ஒரு பகுதியாகத் திண்டுக்கல், மதுரைக்கு வந்து சென்றார் காந்தி. திண்டுக்கல்லுக்கு முதன்முறையாக 1934 பிப்ரவரி 7-ம் தேதி வந்தவர் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் மக்களிடையே பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த இடம் பின்னர் காந்தி மைதானம் என அழைக்கப்பட்டது. தற்போது காந்தி காய்கறி மார்க்கெட்டாக மாறியுள்ளது.
திண்டுக்கல் வந்தபோது தாடிக்கொம்பு சாலையில் உள்ள பால்சாமி அய்யர் சத்திரத்தில் தங்கினார். இந்தச் சத்திரம் இன்னமும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. காந்தியடிகள் இந்தச் சத்திரத்திற்கு வந்து சென்றதன் நினைவாக கல்வெட்டு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
பழநி மலைக்கோயிலில் காந்தி
காந்தியடிகள் பழநிக்கு இருமுறை சென்றுள்ளார். முதல்முறையாக 1934-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காகச் சென்றார். அங்கு அவருக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பழநி மலைக்கோயிலில் உள்ள முருகனைத் தரிசிக்கத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த அவர், சுவாமி தரிசனத்திற்குப் பழநி மலைக்கோயில் செல்ல மறுத்துவிட்டார். மலைக்கோயிலுக்குத் தாழ்த்தப்பட்டோர் செல்ல என்று அனுமதி வழங்கப்படுகிறதோ அன்று மலைக்கோயிலுக்கு வருகிறேன் என்று கூறிப் பிரசாதங்களை மட்டும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். இதையடுத்து 1946-ம் ஆண்டு ராஜாஜியுடன் சிறப்பு ரயிலில் பழநி வந்தார்.
இடைப்பட்ட காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மலைக்கோயில் சென்று முருகப் பெருமானைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. பழநி ரயில் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தியடிகள், தீண்டாமையை இந்து சமூகத்தில் இருந்து முற்றிலும் நீக்கவேண்டும். பழநி மலைக்கோயிலுக்கு செல்லத் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி அளிக்கப்பட்டதால்தான் நான் இங்கு வந்துள்ளேன், என்றார். தொடர்ந்து ராஜாஜியுடன் மலைக்கோயில் சென்று தனது சபதத்தையும் நிறைவேற்றினார். இரவில் பழநி அருகே அ.கலையம்புத்தூரில் உள்ள வீட்டில் தங்கினார். இருமுறை பழநி வந்தபோது அங்குதான் தங்கினார்.
ரயிலில் காந்தி மதுரைக்குச் செல்கிறார் எனத் தகவலறிந்த சின்னாளபட்டி பகுதி மக்கள் அந்த ரயிலை மறித்தனர். காந்தியின் முகத்தைக் காண கிராமமே திரண்டு நின்றது. ரயிலில் நின்றபடியே மக்களைப் பார்த்து, காந்தியடிகள் கை அசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றார். மக்கள் ரயிலை நிறுத்தி காந்தியைக் கண்ட இடம் இன்று காந்திகிராமமாக உள்ளது. காந்தியை மக்கள் சந்தித்ததன் நினைவாக கல்வெட்டு ஒன்றும் ரயில்பாதை அருகே வைக்கப்பட்டுள்ளது. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தியின் சுவடுகள், அவரது நினைவுகளுடன் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
இதுகுறித்துத் திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதி என்.பாஸ்கரன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கறுகையில், ''காந்தியக் கொள்கைகள் இன்றைக்கும், என்றைக்கும் தேவையானவை. அவர் சொல்லிவிட்டுச் சென்ற சுயராஜ்ஜியம் இன்றும் பேசப்படுகிறது. திண்டுக்கல்லில் காந்தி வந்துசென்ற இடங்களை நினைவுகூரும்வகையில் அவர் பேசிய இடம், தங்கிய இடம் என அனைத்து இடங்களிலும் காந்தியப் புனித யாத்திரை மேற்கொண்டு நினைவுக் கல்வெட்டுகள் வைத்துள்ளோம். தொடர்ந்து அவரது நினைவுகளைப் போற்றி வருகிறோம். காந்தியச் சிந்தனைகளைப் பரப்ப எனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டேன். இதற்காகவே திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு ‘இந்திய நாட்டின் நிலையான பொருளாதாரத்திற்கு காந்தியமே’, என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘இந்திய நாட்டின் ஜாதி சமய ஒற்றுமைக்கு காந்தியமே’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்துகிறேன். திண்டுக்கல் என்.எஸ்.,நகரில் காந்தி ஆசிரமம் ஒன்று நடத்தி வருகிறேன். எனது ஆயுட்காலம் வரை காந்தியக் கொள்கைகளைப் பரப்பும் பணியைத் தொடர்ந்து செய்ய உள்ளேன்'' என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago