வழக்கறிஞரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

குற்றவாளியை நீதிமன்றத்தில் சரணடைய வைத்த விவகாரத்தில் எஸ்.ஐ. ஒருவர், வழக்கறிஞரிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தன் கட்சிக்காரரான குற்றவழக்கில் சிக்கிய பேச்சிமுத்து என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் வாங்குவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயன்றுள்ளார்.

ஆனால், நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்து சரண் அடைவதற்காக வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்துள்ளார். இதனை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, வழக்கறிஞர் இசக்கி பாண்டியனை செல்போனில் அழைத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. ஆகவே, என்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு வழக்கறிஞர் மறுத்தாகக் கூறப்படுகிறது.

நேற்று சம்பந்தப்பட்ட குற்றவாளியை நெல்லை நீதிமன்றத்தில் சரணடைய வைத்துள்ளார் இசக்கி பாண்டியன். குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எஸ்.ஐ. இசக்கிராஜா தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு சீருடை இல்லாமல் காரில் தூத்துக்குடியிலிருந்து கிளம்பி நெல்லை நீதிமன்றம் வந்துள்ளார்.

நீதிமன்றத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் மீது, எஸ்.ஐ. இசக்கிராஜா தனது நண்பர்களுடன் வந்த காரை வைத்து மோத முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் துப்பாக்கியைக் காட்டி இசக்கி பாண்டியனைச் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளால் பேசி பேசி இசக்கிராஜா மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தன் மீது காரை மோத முயற்சி செய்து, துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கி பாண்டியன், எஸ்.ஐ. இசக்கிராஜா மீது புகார் செய்தார். வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்பேரில் அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ. இசக்கிராஜா மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்த வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து (SUO-MOTU) எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை 2 வார காலத்திற்குள் அளிக்கும்படி சம்பவம் நடந்த நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

24 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

38 mins ago

ஆன்மிகம்

48 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்