எஸ்ஐ பணி எழுத்துத் தேர்வுக்கான விடை சுருக்கம் செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

சார்பு ஆய்வாளர் பணி எழுத்துத் தேர்வுக்கான விடை சுருக்கத்தைச் செல்லாது என அறிவித்து, இந்திய ரூபாய் மதிப்பிறக்கம் தொடர்பான கேள்விக்கு 3 என பதிலளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜன. 12ல் நடந்தது. முதலில் வெளியான விடை சுருக்கத்தின் (கீ ஆன்சர்) அடிப்படையில் எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது.

இதனால் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் எனக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இறுதியாக வெளியிடப்பட்ட விடை சுருக்கத்தில் 47-வது கேள்விக்கான விடை மாறியிருந்தது. இதனால் எனது மதிப்பெண் 48 ஆக குறைந்ததால் அடுத்தக்கட்டத் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போனது.

இந்திய ரூபாய் 1947-க்கு பிறகு எத்தனை முறை மதிப்பிறக்கம் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு 3 முறை என்பதே சரியான விடை. பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டதால் அதுவே சரியான விடை என கருதி மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை தவறுதலாக மதிப்பிறக்கம் என தவறாக கருதப்பட்டுள்ளது. எனவே அந்த கேள்விக்கு சரியான மதிப்பெண் வழங்கிய என்னை அடுத்தக்கட்டத் தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

இந்திய ரூபாய் 1947-க்கு பிறகு 3 முறையே மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார நிபுணர்கள் 4 முறை என பதிலளித்துள்ளனர். இது தவறானது. இந்தக் கருத்தின் அடிப்படையில் இறுதி விடை சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த கேள்விக்கு 3 முறை என சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது.

தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் தவறான விடை சுருக்கத்தால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது.

விடை சுருக்கம் தயாரிப்பு குழுவில் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே இடம் பெற வேண்டும். எனவே தவறான விடையின் அடிப்படையில் வெளியான விடை சுருக்கம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது.

மனுதாரர்கள் இருவரும் சரியாக விடையளித்துள்ளதால் இருவருக்கும் தலா 0.5 மதிப்பெண் வழங்கி, அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்க வேண்டும்.

இந்த நடைமுறையை 2 வாரத்தில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்