தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: கரோனா ஊரடங்கால் 4 மாத இடைவெளிக்கு பிறகு ஒருநபர் ஆணையத்தின் 21-ம் கட்ட விசாரணை தொடக்கம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத்தின் 21-ம் கட்ட விசாரணை கரோனா ஊரடங்கால் 4 மாத இடைவெளிக்கு பிறகு இன்று தொடங்கியது.

5 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அரசு அலுவலர்கள் 26 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

அதன்படி ஏற்கனவே 20 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 465 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 634 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக 20-ம் கட்ட விசாரணை கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன் பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 4 மாதமாக விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு 21-ம் கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று தொடங்கியது.

இந்த விசாரணைக்காக துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருந்த மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் 26 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று 5 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் 5 பேரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த விசாரணை 28-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்