கரோனா தொற்றுப் பிரச்சினை: கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தலாமா?- சபாநாயகர் தனபால் ஆய்வு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுப் பிரச்சினையை ஒட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை வேறு இடத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்ட நிலையில், கலைவாணர் அரங்கில் நடத்தலாமா? என சபாநாயகர் ஆய்வு நடத்தினார்.

கரோனா தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை. அரசுப் பணிகளில் 50 சதவீத பணியாளர்களைப் பயன்படுத்த கடந்த ஊரடங்கின்போது தளர்வு அறிவிக்கப்பட்டது.

கரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் உள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீத உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவைக் கட்டிடம் பழமையான ஒன்று. உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர முடியாத வகையில் உள்ளது.

இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தை எங்கு நடத்துவது என சபாநாயகர் தனபால் ஆலோசித்து வருகிறார். புதிதாகக் கட்டப்பட்ட கலைவாணர் அரங்கில் ஆயிரக்கணக்கானோர் அமரும் வசதி உள்ளதால் அங்கு நடத்தலாமா? அல்லது பல்கலைக்கழக மண்டபத்தில் நடத்தலாமா? அல்லது திறந்தவெளி அரங்கில் பந்தல் போட்டு நடத்தலாமா? எனப் பல்வேறு ஆலோசனைகள் உள்ளன.

சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கில் பலர் இயங்க வேண்டும். கோப்புகளை எடுத்து வரவேண்டும், பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும். வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும். இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன.

இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்து சபாநாயகர் தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“சட்டப்பேரவை கூடுவதற்கு தகுந்த இடம் வேண்டுமென்று கலைவாணர் அரங்கத்தில் இந்த இடத்தைப் பார்த்துள்ளேன். முடிவு செய்து பின்னர் அறிவிப்போம். கலைவாணர் அரங்கில் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதுபற்றி பின்னர் அறிவிப்போம்”.

இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்