ஆத்துப்பாக்கம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் திருவள்ளுர் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்ற வைத்து அவரது உரிமையை நிலைநாட்டிய ஆட்சியர், காவல்துறை எஸ்பி இருவரையும் பாராட்டுவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
“திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமிர்தம் பட்டியலின சாதியை சேர்ந்தவர் என்பதால் 74வது சுதந்திர தினத்தன்று அவரை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்து அவமதித்துள்ளனர்.
மேலும், அவரை ஊராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்காமலும், ஊராட்சி அலுவலகத்திற்குள் நாற்காலியில் அமரக்கூடாது என்றும், நூறுநாள் வேலையை பார்வையிடக் கூடாது எனவும், கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது எனவும் பல்வேறு நெருக்கடிகளை அவருக்கு கொடுத்துள்ளனர்.
நாடு சுதந்திரம் பெற்ற 74 வது ஆண்டில் கூட இப்படிப்பட்ட கொடுமை நீடிப்பது வேதனைக்குரியது. அந்த அளவுக்கு சாதிய ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மேற்கண்ட நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எங்களது கட்சியின் திருவள்ளுர் மாவட்டக்குழு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், இன்று (20.8.2020) ஆத்துப்பாக்கம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்ற வைத்து அவரது உரிமையை நிலைநாட்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் கொடியேற்ற விடாமல் செய்தது, ஊராட்சித்தலைவர் தன்னுடைய பணிகளை செய்ய விடாமல் தடுத்தது மட்டுமின்றி அவரை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இப்படிப்பட்ட சாதீய ஆதிக்கம் தமிழகம் முழுவதும் நிலவுகிறது. பெண் ஊராட்சித் தலைவர்கள் சுயேச்சையாக செயல்பட முடிவதில்லை. எனவே, ஊராட்சி மன்றங்களில் பட்டியலின சாதி மக்களும், பழங்குடியின மக்களும், பெண்களும் முழுமையாக பணியாற்றவும், எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செயல்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
21 mins ago
க்ரைம்
14 mins ago
இந்தியா
11 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
26 mins ago
தொழில்நுட்பம்
30 mins ago
தமிழகம்
34 mins ago
ஜோதிடம்
21 mins ago
சினிமா
42 mins ago