புதுச்சேரியில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு; இன்று புதிதாக 328 பேருக்குத் தொற்று உறுதி; மேலும் 4 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேர் உட்பட புதிதாக 328 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கடந்த 3 நாட்களில் 1,114 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 7,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.14) கூறும்போது, "புதுச்சேரியில் 1,102 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 310 பேர், காரைக்காலில் 17 பேர், ஏனாமில் ஒருவர் என 328 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிந்துள்ளனர்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

அரியூர் மெயின் ரோட்டை சேர்ந்த 69 வயது முதியவர், கோட்டமேடு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் ஜிப்மரிலும், புதுச்சேரி ஒயுட் டவுன் மணக்குள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 67 வயது முதியவர், எல்லப்பிள்ளைச்சாவடி வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த 52 வயது பெண் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,995 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது புதுச்சேரியில் 949 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 48 பேர் என 1,048 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், புதுச்சேரியில் 1,541 பேர், காரைக்காலில் 125 பேர், ஏனாமில் 163 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 1,832 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 2,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 113 பேர், காரைக்காலில் 39, ஏனாமில் 29 பேர் என மொத்தம் 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,009 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 52 ஆயிரத்து 22 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 44 ஆயிரத்து 28 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 438 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேர் அடங்குவர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 481 பேர், நேற்று 305 பேர், இன்று 328 பேர் என கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 1,114 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐ நெருங்கியுள்ளது. தற்போது, புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் கடைகளின் நேரம் குறைப்பு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்