கரோனா சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை வசூலிப்பு; தனியார் மருத்துமனைகளின் வசூல் வேட்டைக்கு தமிழக அரசே உடந்தை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு விதித்த மருத்துவ கட்டண வரம்பை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக.14) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது. இந்திய அளவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் ஒப்பிட்டு பெருமிதம் அடைந்தனர்.

2 மாதங்கள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. கரோனா சிகிச்சை அளிக்க என்றைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுத்தார்களோ, அன்றைய தினத்திலிருந்து நிலைமை தலைகீழாகிவிட்டது. முதல்வரின் மருத்துவக் காப்பீடு இருந்தால் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு ரூபாய் 9,000 முதல் 15 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த தொகைக்குக் கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்திருந்தார்.

முதல்வர் கடும் எச்சரிக்கை விடுத்த பின்பும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக கரோனா நோயாளிகள் தினந்தோறும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று கரோனாவுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களால் முதலீட்டின் அடிப்படையில் லாப நோக்கத்தோடு சேவை மனப்பான்மையின்றி தொழிலாக நடத்தப்படுவதால் மருத்துவமனை கட்டணங்கள் என்ற பெயரில் கடுமையாக வசூலிக்கப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக இத்தகைய மருத்துவமனைகளில் எவராவது அனுமதிக்கப்பட்டால் நோயாளிகள் நாள்தோறும் குறைந்தபட்சமாக ரூபாய் 50 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்த நிலையில் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் செலுத்தியிருக்கிறார்கள். இதைவிட ஒரு பகல் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.

கரோனா காலத்திலும் ஈவு இரக்கமின்றி நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துவதை தமிழக ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வசூல் வேட்டை நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு விதித்த கட்டண வரம்பை மீறிகிற தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? தனியார் மருத்துமனைகளின் வசூல் வேட்டைக்கு தமிழக அரசே உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கரோனா நோயாளிகளுக்கு விதித்த மருத்துவ கட்டண வரம்பை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைக்கு தமிழக அரசு துணை போகிறது என்ற குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

35 mins ago

சினிமா

36 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

57 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்