புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிப்பு; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் முதல்வர் நாராயணசாமி உறுதி

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், இதனைச் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 24) மாலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும் முன்பு அதிமுக எம்எல்ஏ அன்பழகன் எழுந்து, எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, "எம்ஜிஆர் சிலையின் மீது காவித்துண்டு அணிவித்ததாகத் தகவல் கிடைத்தது. அவருடைய சிலை அவமதிக்கப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தச் செயலை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் கூட பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. யார் எம்ஜிஆர் சிலை மீது காவித்துணி அணிவித்தார்களோ அது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். கண்டிப்பாக எங்களுடைய அரசு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட சாமிநாதன் (பாஜக), "கந்த சஷ்டி கவசம் குறித்து அவமதித்த ஒரு அமைப்பைச் சேர்ந்த நபர் புதுச்சேரியில் வந்து சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார். அவர் இ-பாஸ் இல்லாமல் வந்துள்ளார். அவர் எவ்வாறு புதுச்சேரிக்கு வந்தார்? எப்படித் தங்கினார்" எனக் கேள்வியெழுப்பினார்.

அப்போது, அமைச்சர் கந்தசாமி, "கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நபர் எனது தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தவறாகப் பேசினார். அதனை உடனே வாட்ஸ் அப்பில் பரப்புகிறார். முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்துத் தவறான தகவலைப் பரப்புகின்றனர். மிரட்டுகின்றனர். அதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றார்.

அப்போது, பாஸ்கர் (அதிமுக) பேசுகையில், "ஒருசிலர் அவர்களுடைய சுய விளம்பரத்துக்காக எம்எல்ஏக்களை ஒருமையில் விமர்சிப்பதும், தவறான தகவலைப் பரப்புவதுமாக உள்ளனர். அதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்றார்.

அடுத்துப் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த நபர்கள் போலீஸாரின் கட்டுப்பாடுகளை மீறி குறுக்கு வழியில் உள்ளே வந்துள்ளனர். உடனே அவர்களை தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் எவ்வாறு புதுச்சேரிக்குள் வந்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கந்த சஷ்டி கவசத்தை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. எம்மதமும் எங்களுக்குச் சம்மதம். எல்லா மதத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் நம்முடைய பண்பாடு, பாரம்பரியம்.

வாட்ஸ் அப்பில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றனர். மிரட்டும் வேலையைப் பார்க்கின்றனர். ஆகவே, சமூக வலைதளங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய தரப்பில் காவல்துறைத் தலைவருக்குக் கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

ஆகவே, உறுப்பினர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைத் தலைவருக்கு நீங்கள் (சபாநாயகர்) உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையடுத்துப் பேசிய அன்பழகன் (அதிமுக), "எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மீது தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையடுத்து, அரசு கொறடா அனந்தராமன், "முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தனிநபர் அல்ல. எனவே, தவறான தகவலைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதன்பின்னர் பேசிய ஜான்குமார் (காங்கிரஸ்), "சிறு சிறு அமைப்புகள் சேர்ந்து பல தொல்லைகள் கொடுக்கின்றன. சைபர் கிரைம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது. முதல்வரையே தரக்குறைவாகப் பேசுகின்றனர். இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் சுதந்திரமாகத் திட்டுகின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்து யாரேனும் தவறான தகவல்கள் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

துணை சபாநாயகர் பாலன் பேசுகையில், "அவதூறு பரப்பும் போஸ்டர்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்களே நடவடிக்கை எடுக்கலாம். அதோடு, இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, "புதுச்சேரி மாநிலத்தில் உண்மைத்தன்மை இல்லாத பொய்ச் சம்பவங்கள் அதிக அளவு பரவி வருகிறது. உறுப்பினர்கள் நல்ல கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். ஆகவே, காவல்துறைக்கு உத்தரவிட்டு அதற்குண்டான தீர்வை முதல்வர் எடுப்பார்" எனத் தெரிவித்தார்.

அப்போது, முதல்வர் நாராயணசாமி, "சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் குறித்து உறுப்பினர்கள் பேசிய கருத்துகள், நீங்கள் (சபாநாயகர்) போட்ட உத்தரவுக்கிணங்க காவல்துறைத் தலைவரை அழைத்து, சைபர் கிரைம் போலீஸார் வேகமாகச் செயல்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எழுந்த அரசு கொறடா அனந்தராமன், "எம்எல்ஏ ஒருவர் அரசையும், எம்எல்ஏக்களையும், ஆளுநரையும் அவமரியாதை செய்யும் வகையில் தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்துப் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.

அப்போது அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசும்போது, "பேரவையில் இல்லாத எம்எல்ஏ பற்றி பேசக்கூடாது. அவர் தவறு செய்திருந்தால் பின்னர் புகார் அளிக்கலாம்" என்றார்.

இதனால் அவையில் சிறிது கூச்சல் குழப்பம் நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

க்ரைம்

17 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்