சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ வழக்குப் பதிவு- ஆரம்பக்கட்ட விசாரணை தொடக்கம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ முறைப்படி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைக் கண்டித்து வியாபாரிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தத் தகவலை உயர் நீதிமன்ற கிளையிலும் தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும் சிபிஐ விசாரணையைத் தொடங்க கால தாமதம் ஆகும் என்பதால், அதுவரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

5 பேர் கைது:

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் அதிரடியாக கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடியிலேயே முகாமிட்டு இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், அரசு மருத்துவர், உயிரிழந்தோர் குடும்பத்தினர், நண்பர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என 30-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகள், ஆவணங்கள், தடயங்களையும் சேகரித்துள்ளனர்.

சிபிஐ வழக்குப் பதிவு:

இவ்வாறு சிபிசிஐடி சார்பில் வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ முறைப்படி ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய அரசு கடந்த 6-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, டெல்லி சிபிஐ-க்கு உடனடியாக மாற்றப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் டெல்லி சிபிஐ தனியாக நேற்று மாலை 5.30 மணிக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் எம்.சங்கர் கொடுத்த புகார் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அதே 176 (1-ஏ) (1) என்ற பிரிவின் (சந்தேக மரணம்) கீழ் சிபிஐ-யும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

மேலும், சந்தேகக் குற்றங்கள் என்ற தலைப்பில் சட்டவிரோதமாக சிறை வைப்பு, கொலை, சாட்சிகளை அழித்தல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, விசாரணையின் அடிப்படையில் தான் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த முதல் தகவல் அறிக்கையை டெல்லி சிபிஐ எஸ்பி தன்மயா பேக்ரா பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ சார்பில் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

மேலும், டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் விரைவில் தூத்துக்குடி வந்து நேரடி விசாரணையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 பேரிடம் விசாரணை:

இதற்கிடையே கடந்த மாதம் 19-ம் தேதி இரவு மற்றும் 20-ம் தேதி பகலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 14 காவலர்களை சிபிசிஐடி போலீஸார் இன்று அதிகாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

அலுவலகத்தை பூட்டிவிட்டு உள்ளே வைத்து அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதிகாலை தொடங்கிய விசாரணை இரவு வரை தொடர்ந்தது.

கடந்த 19-ம் தேதி இரவு மற்றும் 20-ம் தேதி பகலில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது மொத்தம் 19 போலீஸார் பணியில் இருந்துள்ளனர்.

இதில் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேரையும் தற்போது பிடித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்