பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் இரங்கல்

By வி.சீனிவாசன்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, மரக்கடை தெரு, தேவாங்கபுரத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன். இவர் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து, நேற்று (ஜூன் 1) இரவு 9 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 89. பாஜக-வின் மூத்த தலைவரான கே.என்.லட்சுமணன் உடலுக்கு பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சமணன், பாஜக முன்னாள் மாநில தலைவராகவும், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராகவும், கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் கடந்த 1930-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி பிறந்தார். சேலம், ஸ்ரீ கோகுலநாத ஹிந்து மஹாஜன உயர்நிலை பள்ளியில் மேல்நிலை படிப்பை முடித்த கே.என்.லட்சுமணன், சேலம், முனிசிபல் கல்லூரியில் பி.ஏ பட்டப் படிப்பு படித்தார். மாணவ பருவத்தில் உடற்பயிற்சியில் சிறந்து விளங்கி, அனைவராலும் 'சாண்டோ' என்றழைக்கப்பட்டார்.

கடந்த 1944-ம் ஆண்டு நா.பா.வாசுதேவன் மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 1957-ம் ஆண்டு தேங்கடி தலைமையில் கே.என்.லட்சுமணன் உள்ளிட்ட குழுவினரால் ஜனசங்கம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர், மாவட்ட பொதுச் செயலாளர், மாவட்ட தலைவர் பொறுப்பை வகித்து, மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 1980-ம் ஆண்டு பாஜக தொடவைங்கப்பட்டபோது, 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை மாநில தலைவராகவும். அதன்பின், 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மாநில தலைவராக இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். பாஜகவில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கே.என்.லட்சுமணன் அரசியல் ரீதியான நூற்றுக்கணக்கான போராட்டங்களில் பங்கேற்று, சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

கடந்த 1970 முதல் 1974-ம் ஆண்டுகளில் நா.பா.வாசுதேவன், கே.என்.லட்சுமணன் சேர்ந்து ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியை தொடங்கி, சிறந்த முறையில் இன்று வரை வழிநடத்தி வருகின்றனர். கடந்த 1967-ம் ஆண்டு ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இணைத்து, லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்குக் கல்வி கிடைக்க உதவியதில், முக்கிய பங்காற்றி வந்தவர் கே.என்.லட்சுமணன்.

மறைந்த கே.என்.லட்சுமணன் பாஜகவின் மூத்த தலைவர்களான தீனதயாள், வாஜ்பாய், அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி வரையிலான பலருடனும் அன்புடனும், நெருக்கமாக பழகி வந்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து ஓய்வில் இருந்த கே.என்.லட்சுமணன் வீட்டுக்கு கடந்த மே 21-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர், கே.என்.லட்சுமணன் மறைவுக்கு இரங்கல் செய்தியும், அவரது மகன், மகளுடன் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

43 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்