ஓசூரில் ஊரடங்கு தளர்வு: குறைவான பயணிகளுடன் 50% பேருந்துகள் இயக்கம்

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் பேருந்து நிலையத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக 50 சதவீத அரசுப் பேருந்துகள் கிருமிநாசினி தெளிப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளுடன் இயக்கப்பட்டன. முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் வருகை காரணமாக பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓசூர் பேருந்து நிலையம் மூடப்பட்டது.

அதன் பிறகு ஓசூர் மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூரில் உழவர் சந்தையும் மூடப்பட்டு காலியாக இருந்த பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தில் தினமும் கிருமிநாசினி தெளித்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உழவர் சந்தை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தப் பேருந்து நிலையத்தில் அதிகமான கூட்டம் இன்றி சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளை வாங்கிச் செல்ல வாடிக்கையாளர்களும் அதிக அளவில் வருகை தந்தனர்.

இதனிடையே ஓசூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையக் கட்டிடத்துக்கு வண்ணம் தீட்டி செப்பனிடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இரண்டு மாதங்களைக் கடந்த பிறகு ஜூன் 1-ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயங்கும் என்ற அரசு உத்தரவு வெளியானது. அதைத் தொடர்ந்து ஓசூரில் இன்று முதல் அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கின. ஆனால் பயணிகள் கூட்டம் இன்றி பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் 3 அல்லது 4 பயணிகளே பயணம் செய்தனர். பேருந்து நிலையமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதுகுறித்து ஓசூர் பேருந்து நிலைய நேரக் காப்பாளர் கூறியதாவது:
’’ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மண்டலங்களுக்கு 50 சதவீத அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 66 நகரப் பேருந்துகளில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், தளி, சூளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒரு வழித்தடத்தில் ஒரு பேருந்து என 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைகள் மூடப்பட்டு இருப்பதால் ஓசூரிலிருந்து ஜுஜுவாடி வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கம் உள்ளது. பேருந்துக் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. இருப்பினும் பொதுப் போக்குவரத்தில் தளர்வு செய்யப்பட்ட முதல் நாள் என்பதால் பயணிகளின் வரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாக உள்ளது. முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

55 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்