சிதம்பரத்தில் இருந்து நடந்தே சென்னைக்குப் புறப்பட்ட வாய்பேச முடியாத பெண்ணுக்கு புதுச்சேரி போலீஸார் உணவளித்து லாரி மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் சிவராணி. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 18 ஆம் தேதி சிவராணி சித்தாள் வேலைக்காக சிதம்பரம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் மீண்டும் சென்னைக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், வாய்பேச முடியாமலும், கையில் பணம் இல்லாததாலும் சென்னைக்கு எப்படிச் செல்வது எனத் தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் நடந்தே சென்னைக்கு செல்ல முடிவெடுத்த அவர் நடக்கத் தொடங்கினார்.
சிதம்பரத்திலிருந்து நடந்தே வந்த சிவராணி நேற்று (மே 24) புதுச்சேரிக்கு வந்தார். அப்போது இசிஆர் சாலை சித்தானந்தா கோயில் அருகில் கரோனா பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மணி, குப்புசாமி, ராஜ், மைக்கேல் அருண் ஆகியோர் அவரைக் கண்டு விசாரித்தனர். அப்போது அவர் வாய்பேச முடியாதவர் என அறிந்து கொண்டனர்.
மேலும், அவருடைய சைகையை வைத்து சாப்பிடவில்லை எனவும் தெரிந்து கொண்டனர். உடனே சிவராணிக்கு உணவு கொடுத்த போலீஸார், அவர் கையில் வைத்திருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டனர். அப்போது சிவராணி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்ததும், கடந்த 4 நாட்களாக அவருடைய உறவினர்கள் அவரைத் தேடிவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, லாஸ்பேட்டை காவல்நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த போலீஸார் இரண்டு மணிநேரத்தில் சென்னை சென்ற வாகனங்களில் சிவராணியை அழைத்துச் செல்ல உதவி கேட்டனர். ஆனால் பெரும்பாலானோர் அழைத்துச் செல்ல முன்வராத நிலையில் தமிழ் என்ற கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சென்னை அழைத்துச் செல்ல சம்மதித்தார்.
உடனே போலீஸார் சிவராணிக்கு செலவுக்கு கையில் ரூ.500 பணம் கொடுத்து, அவர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் பாதுகாப்புடன் சென்று சேர்ந்ததையும் போலீஸார் உறுதி செய்துகொண்டனர்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும்போது, "வாய்பேச முடியாத சிவராணி சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி வரை நடந்தே வந்துள்ளார். அவரது நிலை கவலையை ஏற்படுத்தியது. ஆகவே அவருக்கு உணவு கொடுத்து, லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தோம்" என்றனர்.
கரோனா பணிச் சுமைக்கு நடுவிலும் போலீஸாருடைய உன்னதமான சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago