ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வுப் பணிகள் நாளை தொடக்கம்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வுப் பணிகள் நாளை (மே 25) தொடங்குகிறது. இதற்காக தொல்லியல் துறை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், இங்கு மீண்டும் முழுமையாக அகழாய்வு நடத்த வேண்டும்.

அதுபோல தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என, தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார்.

இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பொருட்களை அறியும் நவீன ரேடார் கருவி மூலம் அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அகழாய்வு பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 2 மாதங்களுக்கு பிறகு கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வழக்கமான பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இரண்டு இடங்களிலும் அகழாய்வு பணிகள் நாளை (மே 25) முறைப்படி தொடங்குகிறது. தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தன் மேற்பார்வையில், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறையின் அகழாய்வு இயக்குநர் ஜே.பாஸ்கரன் தலைமையிலான குழுவினரும், சிவகளையில் அகழாய்வு இயக்குநர் எம்.பிரபாகரன் தலைமையிலான குழுவினரும் இந்த பணிகளை செய்கின்றனர். இதற்காக இரு குழுவினரும் அந்தந்த இடங்களுக்கு வருகை தந்து தயார் நிலையில் உள்ளனர்.

இந்த அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அகழாய்வு மூலம் தமிழர்களின் பண்டைய வரலாறு குறித்த பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என நம்பப்படுவதால், இந்த அகழாய்வு பணியை ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்