வங்கிக்கடன் தவணை காலத்தை நீட்டிக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வங்கிக் கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை வரை நீட்டிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வங்கிக் கடன்களுக்கான தவணைத் தொகைகளை மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு செலுத்தாமல் மூன்று மாதங்கள் கழித்து செலுத்திக் கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் 27 ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்தக் கால அவகாசத்தை ஜூலை வரை நீட்டிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவால் தெரு வியாபாரிகள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வரை என, 90 சதவீதம் பேர் வருமானமின்றித் தவிக்கின்றனர் எனவும், அவர்களுக்கான உதவிகள் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இதற்கு முன் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுவில் உரிய விவரங்கள் இல்லாமல் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், புதிதாக உரிய விவரங்களுடன் மனுத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது.

அதன்படி மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த புதிய மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பங்களிப்பை வழங்கினார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவிலும் எந்த விவரங்களும் இல்லை எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்குச் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்