ஊரடங்கினால் 90 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்: என்ன செய்ய வேண்டும்? - பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்

By செய்திப்பிரிவு

வேலை இழந்தோருக்கு இ.எஸ்.ஐ மூலம் மூலம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஏப்.23) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சில கருத்துகளை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோய் கோவிட்-19 காரணமாக எதிர்பாராத வகையில் 24.03.2020 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்துத் தொழிலகங்களும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், அவற்றின் பணியாளர்களுக்கு ஊதியம், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவற்றை மனிதநேய அடிப்படையில் செய்துதர வேண்டிய பொறுப்பும், கடமையும் நிர்வாகத்திற்கு இருக்கிறது என்று இந்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பு காரணமாக தொடர்ந்து பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலைமை ஏற்பட்டு, நிறுவனங்கள் தவிக்கின்றன.

ஊரடங்கு காரணமாக சுமார் 9 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை தொடர்ந்தால், அக்குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கிவிடும் துயரச் சூழல் உருவாகும்.

மாநில அரசுகள் தங்களது நிதி ஆதாரங்களைக் கொண்டு சொற்பமான அளவில்தான் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றன.

ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் வருவாய் இழப்பின் விளைவாக பட்டினியால் வாடும் ஆபத்து உருவானால், மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுத்துவிடும்.

எனவே இதுபோன்ற நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காண கீழ்க்காணும் பரிந்துரைகளை முன் வைக்கிறேன்.

1. இ.எஸ்.ஐ-யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், திடீரென்று வேலை இழக்க நேரிட்டால் 'அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் அவர்கள் கடைசியாக பெற்றுவந்த ஊதியத்தின் 25 விழுக்காடு மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை 50 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஆவன செய்ய வேண்டும்.

தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் 3.19 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் உள்ள நிதி மூலதனம் ரூ.91 ஆயிரத்து 444 கோடியில், ரூ.23 ஆயிரத்து 151 கோடி இருப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ-யில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இரண்டு மாதங்களாகக் குறைக்க வேண்டும்.

3. இ.எஸ்.ஐ-யில் இச்சலுகையை வாழ்நாளில் ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறையைத் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொள்ளை நோயைக் கருத்தில் கொண்டு நீக்க வேண்டும்.

4. இ.எஸ்.ஐ-யில் 'அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் வேலை இழப்புக்கான சலுகைகளை தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் வழங்க முடியாத நிலை இருந்தால், நிலைக்குழு மற்றும் இ.எஸ்.ஐ ஆகியவற்றின் மூலம் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து, வேலை இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

11 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்