கரோனா தடுப்புப் பணியில் உயிர் துறக்கும் மருத்துவம், பிற துறை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா நோய்த் தடுப்புப் பணியில் முன்வரிசைப் படைவீரர்களான மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறை, அரசு, உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைப்பதில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தாக்கியது, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இவ்வாறு நடப்பது ஆகியவை மருத்துவர்கள், இப்பணியில் ஈடுபடுவோர் இடையே சோர்வை அளித்துள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும். எதிர்பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதுடன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

கரோனா நோய்த் தடுப்புப் பணியில் அரும்பணியாற்றி வரும் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் எவரேனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்த போர்க்காலப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத் துறைகளான மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களும் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு நான் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

*இத்தகைய தன்னலமற்ற பணியை முன்னின்று செய்யும் மேற்சொன்ன நபர்கள் தனியார் மற்றும் அரசு துறையிலிருந்து இறப்பைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் உடலைப் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

* கரோனோ தொற்று தடுப்புப் பணியில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டுள்ள பிற துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும்.

* தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் எவருக்கேனும் கரோனோ தொற்று ஏற்பட்டால், மருத்துவத் துறையின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப அந்த மருத்துவப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும், அந்த மருத்துவமனையின் பிரிவில் முழுமையாக நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்குப் பிறகு மீண்டும் அப்பிரிவில் மருத்துவப் பணிகளைத் தொடரவும் அனுமதிக்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

15 mins ago

ஆன்மிகம்

25 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்