சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு; ஆம்புலன்ஸை உடைத்து ஊழியர்கள் மீது  தாக்கு: 20 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னையில் மனிதாபிமானமற்ற செயலாக கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவரது உடலைக் கொண்டுவந்த மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, ஆம்புலன்ஸை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு சுடுகாட்டுக்குக் கொண்டு வந்தனஃப்ர். அப்பகுதி அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சிலர், மருத்துவர் உடலை இங்கே கொண்டு வரக்கூடாது, திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறித் தகராறில் ஈடுபட்டனர்.

உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கினர். இதனால் ஆம்புலன்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்தது.

ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது. இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

மேலும் அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 188 (ஊரடங்கை மீறுதல்), பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஐபிசி 269 (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 145 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (இயங்கவிடாமல் தடுத்து சிறைப் பிடித்தல்), 294 (பி) (அவதூறாகப் பேசுதல்), 353 (ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா குறித்த சமூகப் பரவல் மீது அக்கறையில்லாமல், அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் ஒரு பக்கம் மக்கள் சாலைகளில் திரிகின்றனர். இன்னொரு பக்கம் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்புடன் புதைக்க முயன்றால், தடுக்கின்றனர். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடக்கின்றன. நேற்று ஈரோடு நம்பியூரிலும் மரணமடைந்த 17 வயதுச் சிறுவனின் உடலைப் புதைக்கவிடாமல் தகராறு செய்துள்ளனர்.

உண்மையிலேயே கிருமித் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால் அரசு கூறியுள்ள ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்து அவசியமான நேரத்தில் மட்டுமே வெளியில் வர வேண்டும். அந்த நேரத்திலும் சமுதாய விலகலைக் கடைப்பிடிப்பதுதான் சரி. அதைவிடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெளிவின்மையைக் காட்டுகிறது என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்