மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றம், பீதியை போக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முத்தரசன்

By செய்திப்பிரிவு

மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றம், பீதியை போக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப்.10) வெளியிட்ட அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் நோய் தொற்று பரவலை மத்திய, மாநில அரசுகள் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. உயிர் கொல்லி தொற்று நோயான கோவிட் 19 இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பது பொதுமக்களுக்கு அச்சமும், பதற்றமும் ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வார காலம் நாடு முழுவதும் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பாதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் பெரும் பகுதி மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு சில நிவாரண உதவிகளை வழங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த இயற்கை பேரிடரை சமாளிக்க உடனடியாக ரூபாய் 12 ஆயிரத்து 200 கோடி கொடுத்து உதவுமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் மிகக் குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளது.

இதனால் மாநில அரசு தனது நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. பொதுமக்கள் குறைந்தபட்சம் ரூபாய் 100 என்றாலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூபாய் 12 ஆயிரத்து 200 கோடி நிதியை, தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

நாளை 11.04.2020 நடைபெறும் பிரதமர் - முதல்வர்கள் காணொலி மாநாட்டுக்கு பிறகு நாட்டின் முடக்க நிலை நீடிக்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்பதை வருகிற செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலவரம் கடுமையாகி வருகிறது என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆங்காங்கு உள்ள கள நிலவரத்தையும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வர் கவனத்திற்கு வழங்கியுள்ளனர்.

அதில் குறிப்பாக, வேலை இழந்த தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளோர், நல வாரியங்களில் பதிவு செய்து கொள்ளாமல் விடுபட்டோர், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள், சுய தொழில் செய்வோர் போன்ற அன்றாட வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருவோர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் விலையில்லா உணவுப் பொருள்கள் மே, ஜூன் மாதங்களுக்கும் நீடிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் கோவிட் 19 பரவல் தடுப்பு மருந்து அடிக்கும் பணியை தமிழ்நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரே நாளில் தெளிக்க வேண்டும்.

விவசாயிகளின் விலை பொருட்களை நியாய விலையில் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும். இதில் நடைபெறும் வர்த்தக சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
முக்கியமானதும், முன்னுரிமை பெறுவதும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பீதி, பதற்றத்தைத் தணிக்க வேண்டிய பணியாகும்.

இதனை ஏதோ ஆளும் கட்சி மட்டுமே செய்து விட முடியாது. முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், துறைச் செயலர் என அனைவரும் தடுப்பு நடவடிக்கை குறித்த விபரங்களை தெரிவித்து வந்தாலும் கோவிட்-19 வைரஸ் பரவி வருவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் பயம், பீதியை குறைக்கவில்லை.

மேலும், கரோனா பாதிப்புக்கு ஆளாகி விடுவோர் சிகிச்சை பெற்று, குணமடையலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் அணுகுமுறை தேவையாகும்.

இதற்கான முறையில் பல்வேறு மட்டங்களில் மூன்று பேர் கொண்ட தன்னம்பிக்கை - தைரியப்படுத்தும் நல்லெண்ணக் குழுக்கள் அமைத்து, செயல்படும் எல்லைகளைப் பிரித்து செயல்படுத்துவது அவசியமாகும்.

மேற்கண்ட உடனடிக் கோரிக்கைகள் மீது முதல்வர் நேரடியாக தலையிட்டு நிறைவேற்ற வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்