மூன்றாவது கட்டத்துக்கு செல்கிறோமா?- பீலா ராஜேஷ் பேட்டி 

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்று 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 690 என்கிற எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:

“வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 90824 பேர், 10818 பேர் 28 நாள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ளனர். 1848 மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை எடுக்கப்பட்ட ஆய்வு மாதிரிகள் 4612. இன்று நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 86 பேர். அதில் 85 பேர் டெல்லி சென்று வந்தவர்கள், ஒருவர் துபாயிலிருந்து வந்தவர், அவர்தான் இன்று உயிரிழந்தவர். சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்கள் 8 பேர், கொஞ்சம் நோய்த்தாக்கம் அதிகம் இருக்கும் நோயாளிகள் 7 பேர்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை (containment activities) அதிகப்படுத்தியுள்ளோம். இதுவரை நாங்கள் பரிசோதித்த வீடுகள் 9 லட்சத்து 22 ஆயிரத்து 860 ஆகும். அந்த வீடுகளில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 896 பேரை சந்தித்துள்ளோம். இதற்காக 15 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடுமையான சுவாசத்தொற்று(severe acute respiratory infection) சோதனை மற்றும் சாரி (SARI) எனப்படும் சர்வைலன்ஸ் 650 சாம்பிள்கள் எடுத்துள்ளோம். அதில் 4 பாசிட்டிவ். அவர்கள் 4 பேரும் ஏதோ ஒரு வகையில் நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

டெல்லிப்போய் வந்தவர்கள் குறித்து 3 துறைகள் மற்றும் எங்களது கள அலுவலர்கள் இணைந்து எடுத்த எண்ணிக்கை 1246 ஆகும். அதையும் உறுதியாக எங்களால் கணிக்க முடியவில்லை. 3 துறையும் சேர்ந்து எடுக்கப்படும் ஆய்வு முடிவில் சரியான எண்ணிக்கை வரும்.

நாம் இப்போதும் இரண்டாவது கட்டத்தில் தான் உள்ளோம். இப்போது கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் தான் சொல்ல முடியும். சாரி(SARI) ஆய்வுதான் நமக்கு சொல்லும், அதன் ஆய்வு சோதனை, மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை (containment activities) கள ஆய்வு செய்து அதன் முடிவு வெளியே வரும்போது தான் எந்த நிலை என்று சொல்ல முடியும்.

இந்த நோயின் அறிகுறி சாதாரணமாக இருக்கும். இது எப்ப பாதிக்கும் என்று சொல்ல முடியாது. இன்று சிகிச்சையில் இருந்து மரணித்த நபர் 1-ம் தேதி அனுமதிக்கப்பட்டு நேற்று வரை நன்றாக இருந்தார். இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உலகெங்கும் சவாலாக உள்ள நோய். அது எந்த நேரத்தில் எப்படி பாதிக்கும் என்று சொல்ல முடியாது.

மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு அதிகம், ஆனால் நாம் தான் அதிகம் டெஸ்ட் எடுத்துள்ளோம். டெஸ்டிங் கிட்ஸ் எண்ணிக்கை எந்த பிரச்சினையும் இல்லை. கரோன பரிசோதனைக்கு தமிழகத்தில் தான் அதிக ஆய்வகங்கள் உள்ளன.

நோய்த் தொற்று குறித்த ஆய்வுக்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலை 2 லிருந்து நிலை 3 க்கு போகாமல் இருப்பதை தடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்க வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு அலுவலர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (containment activities) தான் இப்போது முக்கியம். பிசிஆர் டெஸ்ட் எடுத்து முடிவு வர குறைந்தது 6 மணி நேரம் ஆகும் . அது என்னவென்றால் ஒருவரின் சளித்தொற்றை எடுத்து வைரஸின் தாக்கம் எந்த அளவு என்று வைரஸின் ஆர்என்ஐ -யை சோதிக்கிறோம்.

அது சில நேரம் குறைத்துக் காட்டும் சில நேரம் அதிகரித்துக் காட்டும், சில நேரம் சரியாக காட்டாது. அதனால் தான் மறுபடியும் அவர்களுக்கு சோதனை தேவைப்படுகிறது. அதில் 100 % உறுதியானால்தான் நாம் சொல்ல முடியும்,. இதற்கு கூடுதல் காலம் தேவைப்படுகிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்