துவைத்துப் பயன்படுத்தும் பருத்தித் துணி முகக் கவசம் கோவையில் தயாராகி வருகிறது. 3 மாதங்கள் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க இம்முகக் கவசத்தை பயன்படுத்தித் தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிந்து கொள்ளுதல், கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல், கை கழுவும் திரவங்களைப் பயன்படுத்துதல், இருப்பிடங்களில் கிருமிநாசினிகள் தெளித்தல், பிறரிடம் இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இவற்றைப் பொதுமக்கள் பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், அவற்றின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் திட்டங்கள் மூலமாக பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் 'Non Woven' வகை முகக் கவசங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய இவ்வகை முகக் கவசங்களால் மண் மாசுபட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், துணியால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களைப் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வகை முகக் கவசங்களைத் துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் பொதுமக்கள் இவ்வகை முகக் கவசங்களை அதிக அளவில் வாங்குவதால், கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்நிலையில் கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் இஷானா, பருத்தித் துணியால் ஆன முகக் கவசங்களைத் தயாரித்து வருகிறார். இதுகுறித்துப் பேசுபவர், ''கரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் முகக் கவசங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தினம் ஒரு முகக் கவசத்தைப் பயன்படுத்தும்போது அவர்களுக்குச் செலவு அதிகரிக்கும்.
இதைத் தவிர்த்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பருத்தித் துணியால் ஆன தரமான முகக் கவசங்களைத் தயாரித்து வருகிறோம். பெண் தையல் கலைஞர்களுக்கு ஆர்டர் கொடுத்து அவர்கள் வீட்டில் தயாரிக்கிறார்கள். அதை நாங்கள் நேரில் சென்று சேகரித்துக் கொள்கிறோம். இதன் மூலம் பெண் தையல் கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தருகிறோம்.
இந்த முகக் கவசம் துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்த ஏற்றது என்பதால், 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதனால் பொதுமக்கள் மற்றும் நோய்த்தொற்று உள்ளவர்கள் தினமும் முகக் கவசம் வாங்கும் செலவு மிச்சமாகும்.
அதன் பிறகு இதைத் தூக்கி எறிந்தாலும் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மண்ணில் எளிதாக மக்கிவிடும். பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இம்முகக் கவசங்களை ரூ.30-க்கு விற்பனை செய்கிறோம்.
'Non Woven' வகை முகக் கவசங்களும் கிட்டத்தட்ட இதே விலைக்கு விற்கப்படுகின்றன. சில நேரங்களில் இதை விடக் கூடுதலாகவும் விற்கப்படுகின்றன. ஆனால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
நாங்கள் பலவித வண்ணங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் இக்கவசத்தைத் தயாரிக்கிறோம். சுவாசிக்கும் பகுதியில் துளசி, ஏலம், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை வைக்கும் வகையில் சிறிய பை வைத்துத் தைக்கிறோம். வடிகட்டப்பட்ட காற்றுடன், இவற்றையும் சேர்த்து சுவாசிப்பதால் உடலுக்கும் நன்மை பயக்கும். சுவாச உறுப்புகளும் பலம் பெறும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் இதுபோன்ற பருத்தித் துணியால் ஆன முகக் கவசங்களை வாங்கிப் பயன்படுத்துவது, அவர்களுக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் பாதிக்காது'' என்கிறார், தொழில்முனைவோர் இஷானா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago