கரோனா குறித்து தமிழக மக்கள் அச்சப்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து தமிழக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என்பதற்காகவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அறிவிப்புகள் எல்லாம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும்.
அதாவது, நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கரோனா வைரஸ் பரவல் காரணத்தால் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைப் போக்குவதற்காக பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் மூலம் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொருளாதாரச் சுமையில் இருந்து ஓரளவுக்கு விடுபடுவார்கள்.
குறிப்பாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரலில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்த மாதம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2 நாள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதியாக ரூபாய் 1,000 வழங்கப்படுவதோடு கூடுதலாக ரூபாய் 1,000 வழங்கப்படும் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், கட்டிடத் தொழிலாளர்களுக்கும் சிறப்புத் தொகுப்பூதியம் வழங்கப்படும். சாலையோர வசிப்பு மக்களுக்காக உணவுக்கூடங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார்.
மேலும், தமிழக அரசு கரோனா பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூபாய் 3,280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால் மக்கள் விரைவில் பயனடைவார்கள். அது மட்டுமல்ல, கரோனா தடுப்புக்காக மாநகராட்சிக்கு, நகராட்சிக்கு, பேரூராட்சிக்கு, ஊரக உள்ளாட்சிக்கு நிதி ஒதுக்கியிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
கரோனாவின் பாதிப்பிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களின் சுமை குறையும். எனவே, தமிழக மக்கள் அச்சப்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டோடு, சுத்தமாக சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாத்து, நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனாவுக்கு எதிரான தமிழக சுகாதாரத்துறையின் முயற்சிகள் முழுமையாக வெற்றி பெற துணை நிற்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
சினிமா
6 mins ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
40 mins ago
சினிமா
46 mins ago
இந்தியா
27 mins ago
கருத்துப் பேழை
36 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago