மதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வெளிநாடு செல்லாத நிலையில் மதுரையில் கரோனா பாதிக்கப்பட்டவருக்கு தொற்று எப்படி வந்தது எனத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்று கூறினார்.
இது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்துள்ள 54 வயது நபர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். சுவாசக் கருவி இல்லாமலேயே சிகிச்சையில் உள்ளார்.
நுரையீரல் தொற்று நோய் ஏற்கெனவே அவருக்கு உள்ளது. அவருடன் தொடர்பில் உள்ள மனைவி, மகன் உள்ளிட்டோருக்கு சிறப்பு வார்டில் கரோனா தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனை நடக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு கரோனா தொற்று எப்படி வந்தது என விசாரணை நடக்கிறது.
கடந்த திங்கள்கிழமை அன்று இரவில் எதிர்வீட்டில் நடந்த விழாவில் பாதித்தவர் பங்கேற்றுள்ளார். அவ்விழாவில் பங்கேற்ற 60% பேர் விபரங்கள் கிடைத்துள்ளன.
அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. வழக்கமாக தொழுகைக்கு செல்லும் இடங்களில் வெளிநாட்டவர் யாருடனும் தொடர்பில் இருந்தனரா என விசாரணை நடந்தது. அவர் கட்டுமானப் பணிக்குச் செல்லும் இடத்திலும் விசாரணை நடக்கிறது. சந்தேகப்படும் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளவர் சமீபத்தில் வெளிநாடு செல்லவில்லை. கடந்தாண்டு அவர் அடிக்கடி வெளிநாடு சென்றுள்ளார். அக்டோபர், ஜீன் மாதங்களில் சென்றுள்ளார். 28 நாட்களுக்குள் குறிப்பிட்ட நபர் வெளிநாடு செல்லவில்லை.
அவர் வசித்த பகுதியில் மாநகராட்சி உதவியுடன் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் தொழுகையில் ஈடுபட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட குறிப்பிட்ட நபர் சென்ற இடங்களில் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
அவரது உறவினர்கள் இருக்கும் பகுதி, வசித்த தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் மேலும் 7 பேர் கரோனா அறிகுறியுடன் வந்துள்ளனர். இவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago