தன்னை விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

தன்னை விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளிதுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோக் காவலில் அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா மற்றும் ஆர்.பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், "மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்த இந்த வழக்கை மாநில அரசு, மத்திய அரசை கலந்தாலோசித்துதான் விடுதலை தொடர்பான முடிவை எடுக்க முடியும்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தினை முன்பே நிராகரித்து விட்டோம் என தமிழக ஆளுநருக்குக் கூறிவிட்டோம். அதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது நடைபெறும் அதிமுக அரசின் அமைச்சரவை தீர்மானம் என்பது மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாதவரை பூஜ்ஜியத்திற்குச் சமமானது. நளினி உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே ஆயுள் தண்டனையில் சிறையில் உள்ளார். சட்டவிரோதமாக கிடையாது. அவரது ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், "தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தமிழக ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்காதவரை அளுநரின் அதிகாரத்தை எவரும் கேள்வி எழுப்ப முடியாது. தமிழக அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென பரிந்துரை அனுப்பியதோடு மாநில அரசின் கடமை முடிந்தது. நளினி சட்டவிரோதக் காவலில் சிறையில் இல்லை. நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

நளினி தரப்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன், தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா, இல்லை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது எனவும் மாநில அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று (மார்ச் 11) தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.

அப்போது, நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளதால் நளினி சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகக் கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தண்டனைக் குறைப்பு தொடர்பாக அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் கையெழுத்திட வேண்டியது கட்டாயம் எனவும், ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், நளினியை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அறிவிக்க முடியாது எனவும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் கூறி நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்