அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 682 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குடிநீர் ஆலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டபடி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தார் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண். அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைத்தது குறித்து அவர் தாக்கல் செய்த அறிக்கையில், “தமிழகம் முழுவதும் மொத்தம் 682 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது, தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும். அதற்குக் கட்டணமாக 6000 ரூபாய் வசூலிக்கப்படும். எடுக்கப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிட்டு அதற்குப் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை, கோவை, தமிழ்நாடு குடிநீர் ஆலை சங்கங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதத்தில், “இந்திய தரச்சான்று நிறுவனம், தமிழக சிறு தொழில்துறை, உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு துறை, உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிடம் சான்றிதழ்களைப் பெற்று ஆலைகள் இயங்கி வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீதத்தையே குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுக்கின்றனர். செங்கல் சூளை, தோல், பண்ணை, ஸ்டீல் ஆகிய துறைகள் எடுக்கும் நீரைக் கட்டுப்படுத்த அரசு முயலவில்லை. நிலத்தடி நீர் பகுதிகளை 4 ஆகப் பிரித்த பின்னர், பல இடங்களில் நீரின் அளவு உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், நீரை அளவின்றி எடுக்க அனுமதிக்க வேண்டுமென அர்த்தமாகாது. பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்து வரும் இந்த ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோதச் செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா?'' எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளின் வாயிலாக அறிந்ததாகவும், போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்தால் அது தவறு என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை சீல் வைத்ததை ஆய்வு செய்வதற்கு சுதந்திரமான ஒரு குழுவை அமைக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
குடிநீர் ஆலைகள் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ஏற்கெனவே மூடப்பட்ட ஆலைகளால் குடிநீர் உற்பத்தி செய்து வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதே தவிர, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கவில்லை. ஆலைகள் மூடி இருக்கும்போது எப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியும்” என்று தெரிவித்தனர்.
முறையாக உரிமம் பெற்றுச் செயல்படும் ஆலைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கவனத்திற்குத் தெரியாமல் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது எனக் குறிப்பிட்டனர்.
குடிநீர் நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் வழக்கை விசாரிக்கவில்லை என்றும், சட்டவிரோத நீர் எடுப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கின் மீது இடைக்கால உத்தரவு மார்ச் 4-ம் தேதி (நாளை) பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 mins ago
சினிமா
7 mins ago
இந்தியா
13 mins ago
ஓடிடி களம்
31 mins ago
கருத்துப் பேழை
28 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
21 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago