மாற்றுத்திறனாளிகளுக்கும் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம்: புதுச்சேரி அரசு முடிவு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இனி 20,544 மாற்றுத்திறனாளிகளுக்கும் 15 கிலோ அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி மக்களுக்குத் தரப்பட்டு வந்தது. ஆனால் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் தர ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, உயர் நீதிமன்றமும் இதைச் செயல்படுத்த உத்தரவிட்டது. இச்சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தரப்பட்டு வந்த அரிசிக்குப் பதிலாக பணம் தரப்பட உள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு தற்போது அரிசிக்கப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் நான்கு பிராந்தியங்களில் உள்ள சுமார் 20 ஆயிரத்து 544 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 15 கிலோ அரிசிக்குப் பதிலாக அரிசி கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் என்கிற விதத்தில் மூன்று மாதங்களுக்கான அரிசிக்குப் பதிலாக 1,350 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது. இதற்காக இரண்டு கோடியே 78 லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் செலவிட முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதேபோல் பல்வேறு கட்சிகள் அரிசிக்குப் பதிலாக பணம் தர வலியுறுத்தி வருகின்றன. இச்சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிக்குப் பதிலாக பணம் தர புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

38 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்